சமூக அவலத்தின்
சகிக்க இயலா உச்சமது
சம்பவித்துக் கொண்டே இருக்கிறது
மீண்டும் மீண்டும்
ஆதிக்க வெறி பிடித்த
ஆட்கொள்ளி மிருகங்களின்
அகோரப் பசிக்கு
அப்பாவிக் காதலர்கள்
ஆகாரமாவதை
ஆணவக்கொலை என்று
ஆவணப்படுத்தியதோடு
பொறுப்பு தீர்ந்ததென
ஒதுங்கிக்கொள்கிறது
இந்தப் பொதுச் சமூகம்
குற்ற உணர்வுகள்
அற்றுப்போன அவர்களுள்
கற்றோர் கல்லாதோர்
பேதங்களில்லை
தொற்று நோயாய்
தொடரும் இப்பாதகத்தால்
இங்கு மரணங்கள் நிகழாத
மாதங்களில்லை
சம்பூகன் வதங்கள்
சமகாலத்திலும் தொடர்வதில்
சங்கடமேதுமில்லை
சிலர்க்கு
சாதி கடந்து
காதல் புரிவோரை
சவக்குழிக்குள் அனுப்புவதே
அவர்களின் இலக்கு
ஆத்திரம் கண் மறைக்க
ஆயுதம் எடுப்பவனுக்கு
சூத்திரன்தானே நாமென்ற
சுய அறிவு இருப்பதில்லை
கோத்திரம் குலம் பார்த்து
கோயில் குளம் மதம் பார்த்து
கோச்சார பலன் பார்த்து
காதல் எங்கும் பிறப்பதில்லை
நீங்கள் வெட்டிச் சாய்த்த
பிணங்கள்
வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன
நீங்கள் வெட்டியாய் வாழும்
பிணங்களென்பதை!
ஆக மொத்தம் இங்கு
அவன் வேறு
நான் வேறு
என்பதல்ல சிக்கல்
அவன் கீழே
நான் மேலே
என்பதுதான்!
நாகரீக சமூகத்தில்
நாளையும் இது
தொடராதிருக்க
முற்றிப்போன சாதி வெறி
முற்றிலுமாய் உதிரட்டும்!
அல்லது...
சுற்றும் இந்த பூமிப்பந்து
சுக்குநூறாய் உடையட்டும்!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome