மற்ற சிலரைப்போல
மெளனமாகக் கடந்து சென்றிருக்கலாம்
ஓரிருவர் உதவுவதை
ஓரக்கண்ணால் பார்த்தபடி
ஒதுங்கிப் போயிருக்கலாம்
அல்லது இரக்கப் பார்வையுடன்
இறைவா காப்பாற்று என்றபடி
இடத்தையாவது
காலி செய்திருக்கலாம்
இழிவுகள் நிரம்பிய
இதயத்தின் பாரத்தை
இதற்கு மேலும் தாங்க இயலாமல்
இப்படித்தான் புலம்பித் தவிக்கிறேன்
இரண்டொரு நாள்களாக
அதிலும் குறிப்பாக
பாதி கிழிந்த பணத்தாள் ஒன்றை
பார்வையற்ற அந்த யாசகனிடம்
கருணையின்றி கையளித்த
நாளிலிருந்து....
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome