Sunday, September 14, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!




என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!


எத்தனை முறை எண்ணிப் பார்க்கினும்  
எள்ளளவும் சலிப்பதில்லை 
என் அரைக்கால் சட்டைப் பருவத்து
அற்புத தீபாவளி நினைவுகளை!

நான்கு மணிக்கு எழுப்பச் சொல்லி 
நாற்பது முறை நினைவுபடுத்தியதில் 
என்னோடு சேர்ந்து அம்மாவும் 
தூங்காமல் போன தீபாவளி இரவுகள் முதல்,

தீபாவளி  அதிகாலையில் 
தெருவில் வெடிக்கும் 
முதல் வெடி யாருடையது?
என்கிற போட்டியில் 
அத்தனை தீபாவளிகளிலும் 
அசராமல் தோற்றது வரை 

எதுவும் அகலவில்லை 
என் இனிய நினைவுகளை விட்டு!

தீபாவளிப் பலகாரம் மட்டுமல்ல 
தீபாவளிப் பண்டிகையே 
தித்திக்கத்தான் செய்தது அன்று! 

இப்போதும் வரத்தான் செய்கிறது  
வருடம் தோறும் தீபாவளி!

அதே பட்டாசு சத்தம்! அதே பலகார வாசம்!

ஆனாலும் குறைகிறது 
ஆழ் மனதில் ஏதோவொன்று!


                       - நிலவை.பார்த்திபன்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - உனக்காக!


உனக்காக! 


கையிலதான் பூக்கூட
கண்ணுலதான் ஏக்கத்தோட 
மயிலு நானும் காத்திருக்கேன் 
மாமன் உனக்காக! 

என்னைக்கு நான் உங்கூட 
சேரப்போறேன் உரிமையோட?
எப்ப சேதி சொல்லப்போற 
எனக்காக?

கூடையில வச்ச பூவு 
வாசம் மாறிப் போகுமுன்ன 
கூந்தலில வச்ச பூவு 
வாடி வதங்கிப் போகுமுன்ன 
குறும்புக்கார மாமன் நீயும் 
இந்தக் குயிலைத் தேடி வரணும்!

கூறப் பொடவ குளிச்சி உடுத்தி 
கூட்டாஞ்சோறு ஆக்கி வடிச்சு 
குத்தாலத்து மேகம் போல 
கூந்தலத்தான் அள்ளி முடிஞ்சு 
காத்திருக்கும் எனக்கு நீயும் 
தாலி கொண்டு தரனும்! 

வச்ச கண்ணு வாங்காம 
வாச பாத்துக் காத்திருக்கேன்!
நீ வைக்கப்போகும் பொட்டுக்காக  
பிச்சிப் பூவா பூத்திருக்கேன்!

                                - நிலவை.பார்த்திபன்