இரசித்த கவிதைகள்


ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி


பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.

திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிபால குடிச்சுபுட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.

மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.

மொகராசி பரவால்ல
மூக்குநுனியூம் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.

அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியூம் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.


- ஜெ.சுந்தரபாண்டி

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````

சரியாக வரையாத
மயிலை
எச்சில் தொட்டு
அழித்து விட்டு
மீண்டும் தொடங்கினாள்…
லட்சுமிக்குட்டி
எச்சிலுக்கு ஏங்கி
இப்போதும்
கோணலாகவே
வந்து நின்றது மயில்

- கண்மணி ராசா

----------------------------------------------------------------------------------------------------



திண்ணையை இடித்துத் தெருவாக்கு!


Want create site? Find Free WordPress Themes and plugins.
உட்கார் நண்பா. நலந்தனா? – நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டு விரல்நீ சுருங்குவதா? – உன்
சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
“புல்லாய்ப் பிறந்தேன் நானென்று” – நீ
புலம்ப வேண்டாம். நெல்கூட
புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் – அது
பூமியின் பசியைப் போக்கவில்லை?
“கடலில் நான் ஒரு துளி யென்று” – நீ
கரைந்து போவதில் பயனென்ன?
கடலில் நான்ஒரு முத்தென்று” – நீ
காட்டு. உந்தன் தலைதூக்கு!
வந்தது யாருக்கும் தெரியாது – நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது.
சந்ததி கூட மறந்துவிடும் – உன்
சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?
திண்ணை தானா உன்தேசம்? – உன்
தெருவொன் றேயா உன்னுலகம்.
திண்ணையை இடித்துத் தெருவாக்கு – உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை! – அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை! 
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்னதடை?
பூமிப் பந்து என்னவிலை? – உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம் – வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!
– தாராபாரதி

வேலைகளல்ல  வேள்விகளே

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம் 
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும் 
பல்லவி எதற்குப் பாடுகிறாய் 

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் 
வேங்கைப் புலிநீ தூங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று 
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன் 
விழிமுன் சூரியன்  சின்னப் பொறி 
எழு எழு தோழா உன் எழுச்சி -இனி 
இயற்கை மடியில் பெரும்புரட்சி 

நீட்டிப்  படுத்தால் பூமிப்பந்தில்
நீதான் பூமத் தியரேகை-நீ 
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான் 
பூமி வலம் வரும் புதுப் பாதை 

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் 
விரல்கள் பத்தும் மூலதனம் 
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன் 
கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்து சொல் 
சுட்டு விரலின் சுகமாய் வானம் 
சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை 
தோல்விகள்  ஏதும் உனக்கில்லை-இனி 
தொடுவானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடி  வரும்-உன் 
தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-
துருவங்களுக்குப்  பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை 
வேலைகளல்ல வேள்விகளே!

– தாராபாரதி

No comments:

Post a Comment

Comments are always welcome