Thursday, February 28, 2019

பூக்காத கிளைகள்

திருத்த இயலா இறைவனின் பிழையாய்
இருபாலர்க்கும் இடைப்பட்ட நிலையாய்
குருஞ்சிச் செடியின் பூக்காத கிளையாய்
வருத்தக் கடலில் வற்றாத அலையாய்
இழந்து வாழ்கிறோம் 
எமக்கான பங்கை!
இத்திருநாட்டில் எமது பெயர் 
"திருநங்கை"!

கங்கையாய் பிறந்திருந்தால்
முக்கண்ணன் முடி சேர்ந்திருப்போம்! 
மங்கையாய் பிறந்திருந்தால் 
மானத்தோடு வாழ்ந்திருப்போம்!
திருநங்கையாய் பிறந்ததனால்
தினந்தோறும் மனம் வருந்துகிறோம்!

வலி, இரணத்தோடு 
வாழ்வைக் கடத்தும் எமக்கு 
அலி, அரவாணி என
ஆயிரம் பெயர்கள்!

இழி குணத்தோடு 
இழிவு செய்யும் பலரால்
இடைவிடாது எமை 
துரத்தும் துயர்கள்!

அரைவேக்காட்டு ஹார்மோன்களா?
குழம்பிப்போன குரோமோசோம்களா?
குற்றமென்று எதைச் சொல்ல?
புழுக்களா நாங்கள் புறந்தள்ள?

கொச்சையாய் விளிப்பீர்கள்!
துச்சமாய் மதிப்பீர்கள்!
இச்சைக்கு அழைப்பீர்கள்!
பிச்சைகேட்டால் வெறுப்பீர்கள்!

அழிந்து வரும் உயிரினங்கள் 
ஆயிரம் உண்டு காட்டினுள்ளே!
வதைந்து சாகும் உயிரினங்கள் 
எமைப்போலே நாட்டிலில்லை!

கழிப்பிடங்கள் கூட 
எமக்கென்று ஏதுமில்லை! 
மதிப்புடனே வாழும்படி 
வேலைதர யாருமில்லை!
அன்னை தந்தை இருந்தபோதும் 
ஆதரிக்க எவருமில்லை!
பெண்ணாய் எமை ஏற்பதற்கு 
பெண்களுக்கே மனது இல்லை!

கேலியாக எமை நோக்கும்படி 
கேவலங்கள் எம்மில் ஏது?
தோழியாக எமைப் பார்ப்பீர்களெனில்
பாலியல் தொழில் எமக்கெதற்கு?

சபிக்கப்பட்ட வர்கம் நாங்கள் 
சம உரிமை தாருங்கள்! - எமை 
தவிக்கவிட்ட கடவுளைக் கண்டால் 
சரியா இது எனக் கேளுங்கள்!

- நிலவை பார்த்திபன்

தேர்தல் மேடையில் தேசபக்தி நாடகம்

அடுத்தமுறையும் ஆட்சியமைக்க
அபிநந்தன்களை அடகுவையுங்கள்! - உங்கள்
அட்டூழியம் கண்டு ஆத்திரம் கொண்டால் 
'ஆண்டி இன்டியன்' என அடக்கி வையுங்கள்!

வழியும் குருதி
வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
வர்ணாசிரம தர்மம்
வரண்டிடாமல் காத்துக்கொள்ளுங்கள்!

எரியும் நெருப்பை
எப்போதும் அணையவிடாதீர்கள்!
எல்லைப் பதற்றங்களை
எள்ளளவும் தணியவிடாதீர்கள்!

வெடிமருந்து வாசம் பரப்பி
வெகுஜனங்களை வெறியேற்றுங்கள்!
வேற்றுமை கோஷம் எழுப்பி
வேண்டாதவர்களை வெளியேற்றுங்கள்!

பாவப்பட்ட பாரதமாதாவை
'ஜே' சொல்லி வெறுப்பேற்றுங்கள்!
ஓட்டுக்காக மக்களைப் பிரித்து - எங்கள்
ஒற்றுமையின் மீதே நெருப்பேற்றுங்கள்!

ரஃபேல் கறைகளை
இரத்தக் கறைகளால் மறையுங்கள்!
படேல் சிலைகளை
பாரதமெங்கும் நிறுவுங்கள்!

தேர்தல் வருகிறது
தேசபக்தியைத் தேடியெடுங்கள்!
தெருவோரத் தொழிலாளர்களின்
கால்பிடித்துக் கழுவிவிடுங்கள்!

படுதோல்வி பயம் வந்தால்
படைவீரர்களை பலி கொடுங்கள்!
பாகிஸ்தானுடன் பகைமை வளர்த்து
இந்தியர்களின் இதயம் தொடுங்கள்!

காஷ்மீரத்துப் பாவக்கணக்கை
காசி கங்கையில் கழுவிக்கொள்ளுங்கள்!
கார்ப்பரேட் கனவான்களை மட்டும்
காசுக்காகத் தழுவிக்கொள்ளுங்கள்!

ஒருபுறம் ஈவிரக்கத்திற்கு
ஈமக்கடன் செய்துகொண்டே
மறுபுறம் தீவிரவாதத்தை
திட்டித் தீருங்கள்!
பொருளாதாரத்தை பொசுக்கிய கையோடு
வருங்கால இந்தியாவிற்கு
வாய்க்கரிசி போடுங்கள்!

மதவெறி இரத்தம் பாய்ந்து
மலரட்டும் தாமரை!
மறுமுறையும் நீங்கள் வென்றால்
தேசத்திற்கே இனி தேய்பிறை!

- நிலவை பார்த்திபன்

Sunday, February 17, 2019

இறந்த வேங்கைகளுக்கோர் இரங்கற்பா

அங்கே சீருடைகளுடன் சிதறிக்கிடப்பவை
உயிரற்ற உடல்கள் மட்டுமல்ல!
உடைந்துபோன ஒவ்வொரு
இந்தியனின் உள்ளங்களும்தான்!

அங்கு இரணப்பட்டுக் கிடப்பது
இராணுவ முகாம்கள் மட்டுமல்ல!
மனம் நொந்த இந்தியர்களின்
பலகோடி இல்லங்களும்தான்!

தீராப் பசிகொண்ட தீவிரவாதம்
எங்கள் தீரர்கள் சிலரைத்
தின்று விழுங்கியிருக்கிறது!

குண்டு  வெடித்தது
புல்வாமாவில் என்றபோதும்
குமரிவரை இன்று குலுங்கியிருக்கிறது!

ஒருபுறம்
நேசமிகு உறவுகளைத்
தேசத்திற்காய் இழந்துவிட்டு
பேசவும் இயலாது
பெருந்துயரில் சில குடும்பங்கள்!

மறுபுறம் இது
மோசமிகு அலட்சியமா அல்லது
கூசவைக்கும் அரசியலா
என ஊசலாடும் ஊகங்களால்
உள்நாட்டில் சில குழப்பங்கள்!

கலவர இரத்தத்துளிகள்
காலங்காலமாய் சிதறித் தெறிப்பதால்
எந்நிறப் பூக்களாயினும்
செந்நிறத்திலேயே பூக்கின்றன
கண்ணீர் பிரதேசமான காஷ்மீரில்!

கனரக ஆயுதங்கள்
காலங்காலமாய் மோதிக்கொள்வதால்
வெடியோசையற்ற அமைதிக்காக
வெகுநாட்களாய் காத்திருக்கின்றன
காஷ்மீரத்து உயிர்களின் காதுகள்!

எங்கள் எல்லைச் சாமிகளை
எதிர்நோக்கத் துணிவின்றி
கொல்லைப்புற வழியாக
கொன்றுபோட்ட கோழைகளே!

அடிக்கோடிட்டு எழுதிக்கொள்ளுங்கள்
அழிவுகாலம் இது உங்களுக்கென்று!
அமைதிகொள்ளும் இனி எமது ஆயுதங்கள்
அசுரப் பிறவிகள் உங்களைக் கொன்று!

நீங்கள் தீவைத்து விளையாடும்
தீவிரவாதத் திரிமுனைகளை
உங்கள் குருதி கொண்டே இனி
குளிர்விப்போம்!

குண்டு வெடிப்பால் உண்டான
பள்ளங்கள் அனைத்தையும்
உங்கள் சவங்களால் நிரப்பி
சமன் செய்வோம்!

இனி வெள்ளைக் கொடிகள்
தன் வேலை மறந்து உறங்கட்டும்!
வெற்றிக் கொடிகள் நம்
மண்ணில் ஆழ இறங்கட்டும்!

- நிலவை பார்த்திபன்