Tuesday, May 28, 2019

சூழல் காப்பது சுகம்



காசு தேடியே களைத்த மனிதா 
காடு செய்வோம் வா!
மாசு ஏறிய உலகினைக் கொஞ்சம் 
மாற்றியமைப்போம் வா!

தூசு நிறைந்த காற்றினைச் சலித்து 
தூய்மை செய்வோம் வா! - நாம் 
தூக்கி எறிந்திடும் விதைகளையெல்லாம் 
துளிர்த்திடச் செய்வோம் வா!

வறண்டு கிடக்கும் வனங்களையெல்லாம் 
வளமாய் மாற்றிட வா! 
இரண்டு மரங்களை இழந்தோமென்றால் 
இருபதை நடுவோம் வா!

தூறல்கள் சிந்தும் மேகத்தை இழுக்க 
தூண்டில்கள் செய்வோம் வா!
மீறல்கள் இல்லா விதிமுறை வகுத்து 
மீட்போம் இயற்கையை வா!

வன உயிர்களின் வாழ்விடம் காக்க 
வகை செய்வோம் வா! 
வணிக நோக்கில் வனம் அழிக்கும் 
வஞ்சகம் எதிர்ப்போம் வா!

சூழல் காப்பதே சுகமென அறிய
தோழனே நீயும் வா!
சூரியச் சூட்டின் வீரியம் குறைக்க
சூத்திரம் செய்வோம் வா!

இருகரம் கூப்பி இயற்கையைத் தொழுவோம்
இளைஞனே நீயும் வா!
இறப்புக்கு முன்பே இயன்றதைச் செய்து 
இலக்கினைத் தொடுவோம் வா!

சுற்றுச் சூழலின் சுத்தம் காத்திட
யுத்தம் செய்வோம் வா!
தொற்று நோய்களைத் தோற்கச் செய்ய
சற்று முயல்வோம் வா!

மரங்களைக் காக்க கரங்களைக் கோர்ப்போம்!
மனிதா நீயும் வா!
உறக்கங்கள் இனியும் உள்ளத்தில் எதற்கு
உழைத்திட நீயும் வா!

வறட்சியைக் கொன்று வளங்களைக் காக்க
வாலிபனே நீ வா!
வருங்காலத்தை வசந்தங்கள் தழுவ
வழிவகை செய்வோம் வா!

பாரதத் தாய்க்கு பசுமை உடுத்தி
பரவசம் கொள்வோம் வா!
வேறெது நமக்கு இதைவிட பெருமை
வேர்களில் நீர்விட வா!

தனிமரம் தோப்பாய் ஆவது இல்லை 
அணிசேர்ந்திட நீ வா!
இனிவரும் தலைமுறை நமையே பழிக்கும் 
இருப்பதைக் காப்போம் வா!

- நிலவை பாா்த்திபன்

ஈகைத் திருநாள்

துவங்கியது ரமலான் எனும்
புனிதமிகு மாதம்! - இதில்
துளிர்க்கட்டும் ஈகை குணம்
இதயங்கள் தோறும்!

பள்ளிவாசல் எங்கும்
பக்திமணம் கமழும்! - இது
பட்டினியாய் இருந்து நமது
பாவம் தீர்க்கும் தருணம்!

ஐம்பெரும் கடமைகளில்
மூன்றாவது இந்நோன்பு! - அதில்
ஐம்புலனும் அடக்குதல்
மனிதர்க்கு மான்பு!

சஹர், இப்தார் இரண்டிற்கும்
இடைப்பட்ட நேரம் - இதில்
பசி, தாகம் நம்மோடு
போரிட்டுத் தோற்க்கும்!

திருமறை ஓதல்கள்
தினந்தோறும் தொடரும்!
ஐம்முறைத் தொழுகையால்
ஆனந்தம் படரும்!

உண்ணாமை, பருகாமை,
புணராமை தவிர
பகைமையை மறப்பதும்
நோன்பென்று அறிக!

மறை போற்றும் மாதமிதில்
இறையோனைத் தொழுவோம்!
பிறை காணும் நாள்வரையில்
நோன்பதனைத் தொடர்வோம்!

நபிமார்கள் நல்வாக்கை
நம் நெஞ்சில் ஏற்போம்!
நல்லிணக்கம் தழைத்தோங்க
நம் கரங்கள் கோர்ப்போம்!

ஈகைத் திருநாளதனை
வரவேற்று மகிழ்வோம்!
இதமான வாழ்த்துகளை
எல்லோர்க்கும் பகிர்வோம்!

- நிலவை பார்த்திபன்