Sunday, December 30, 2018

இரண்டில் ஒன்று

நாளையோடு நிறுத்திக்கொள்வோம்
நமக்குள்ளான இந்த விளையாட்டை!

நீ மனம் திறப்பாயென நானும்
நான் மௌனம் கலைப்பேனென நீயும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
இன்றுவரை பரிமாறிக்கொண்டது
ஏமாற்றங்களை மட்டுமே!

எதிர்வீட்டு காமாட்சி அக்காவிடம்
என்னை காதலிப்பதாக நீ சொல்லி
ஏப்ரல் வந்தால் ஏழு வருடங்கள்
ஆகப்போகிறது!

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
அண்ணாச்சி கடையில்
அரிசி வாங்கும்போதும்
பிள்ளையார் கோவிலில்
பிரசாதம் வாங்கும்போதும்
கண்களால் மட்டும்
பேசிக்கொண்டிருப்பது?

பேருந்து நிறுத்தத்தில் பேசிவிடலாம்
என்ற எனது பெருமுயற்சிகள்
உன் தோழிகள் உடனிருப்பதால் தோற்றுப்போகின்றன!

மாரியம்மன் கோவில் திருவிழாவில்
மடக்கி உன்னிடம் பேச முயன்றபோது
மாவிளக்குப் போட்டு வருகிறேன்
என்று சொல்லிச் சென்று மாயமானாய்!

அடுத்த திருவிழாவும் வரப்போகிறது!
அதே மாவிளக்கை இன்னும்
போட்டுக் கொண்டிருந்தால்
அம்மனுக்கே ஆத்திரம் வராதா?

நமக்குப் பின்
காதலிக்கத் தொடங்கிய சிலருக்கு
தற்போது நான்கைந்து வயதில்
பிள்ளைகள் இருப்பது
தெரியும்தானே உனக்கும்?

குசும்பு பிடித்த
அதில் சிலர்
குழந்தையிடம் எனைக்காட்டி
அங்கிளுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லு
என நாசுக்கான நக்கலடிப்புகள் வேறு!

ஒன்று...நான் காதல் சொல்ல
தயங்காமல் காதுகொடு!
நாணப்பட்டால் உன்
தங்கையையாவது தூது விடு!

இரண்டில் ஒன்று இன்றே வேண்டும்!
காலம் போனால் வராது மீண்டும்!

- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome