Sunday, December 30, 2018

கண்டதும் காதல்

காணும்போதெல்லாம் புன்னகைத்தாய்!
காந்தப் பார்வையால் கவர்ந்திழுத்தாய்!
காதல் விலங்கிட்டு எனை சிறையெடுத்தாய்!
கனவில் வந்து தினம் போர் தொடுத்தாய்!

சிரித்துப் பேசி என்னுள் சிறகடித்தாய்!
மனதின் கவலைகளை மறக்கடித்தாய்!
கீச்சுக் குரலால் எனை கிறங்கடித்தாய்!
இவ்வாழ்க்கை வரமென்று வகுப்பெடுத்தாய்!

காதல் சொன்னபோது மறுதலித்தாய்!
மரண வலிதனை மனதிலிட்டாய்!
மாதக்கணக்கில் எனை மருகவிட்டாய்!
உள்ளம் நொந்து எனை உருகவிட்டாய்!

உண்மை சிலவற்றை உணரவைத்தாய்!
உள்ள மயக்கத்தை தெளியவைத்தாய்!
வெறும் பார்வை காதலில்லை புரியவைத்தாய்!
பாதை தெளிந்து எனை நடக்கவைத்தாய்!

காதல் பருவத்து இளைஞர்களே!
கனவில் வாழ்கின்ற இதயங்களே!
கற்பனை என்பவை பிம்பங்களே!
கண்மூடிக் கிடந்தால் துன்பங்களே!

கண்டதும் காதல் வருவதில்லை!
வந்தால் அதன் பெயர் காதலில்லை!
உணர்ந்தவர் சறுக்கி விழுவதில்லை!
விழுந்தவர் எளிதில் எழுவதில்லை!

- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome