Sunday, December 30, 2018

உறக்கம்

மருத்துவமனைக் காத்திருப்புகளில் 
நமக்கான முறை வர
நான்கைந்து நிமிடங்களிருக்கும்போதும்,

ஜன்னலோரப் பேருந்துப் பயணங்களில்
சற்று நேரத்தில்
இறங்க வேண்டிய
சமயங்களிலும்,

தேநீர் கடையின்
தேய்ந்த இருக்கையில் அமர்ந்து
நாளிதழ் புரட்டும்
நண்பகல் வேளையிலும்,

திரைப்படங்களில் வரும்
தீய கதாபாத்திரங்கள்
திடீரெனத் திருந்தும்
காட்சிகளின்போதும்,

முடி திருத்தும் கடையில்
முகச்சவரத்திற்கு முந்தைய
காதோர கத்தரி விசாரிப்புகளின்போதும்,

பிறந்தவீட்டுப் பெருமையை
பிற்பகல் நேரத்தில்
மனைவி சொல்லக் கேட்கும்போதும்,

தவறாமல் வந்துவிடுகிறது....

இரவெல்லாம் புரண்டு கிடந்தபோது
இம்மியளவும் வராத உறக்கம்!


   - நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome