Sunday, December 30, 2018

ஈரோட்டுக் கூரீட்டி

நேற்றைய தமிழர்க்கு
நேர்ந்த அவலங்கள்
இன்றைய இளைஞர்கள் அறியார்!
வேற்றுமைகளை ஒரு
வேங்கை எதிர்த்தது
அவர்தான் எங்கள் பெரியார்!

பகுத்தறிவதனை புகுத்திட சுழன்ற
புதுப்புயல் என்றால் அது யார்?
பழமையை எதிர்த்த
பகலவன் இவனை
பாமரர் கூட அறிவார்!

பெரியார் கொள்கைகள் பெரிதுமுணர்ந்தவர்
சாதியைச் சதியென புரிவார்!
சுயமரியாதையை விரும்பும் மனங்களில்
சுடராய் இவரென்றும் எரிவார்!

ஆணாதிக்கச் சிரங்கு கண்டவர்
அற்ப சுகத்திற்கதை சொறிவார்!
பெண் விடுதலையை எதிர்க்கும் எவருக்கும்
பெரியார் பேயாய்த் தெரிவார்!

மாதவிலக்கையும் மடையர் சிலரிங்கு
தீட்டெனப் பிதற்றித் திரிவார்!
பெரியார் பாதையில் சரியாய் நடப்பவர்
சாத்திரம் பொய்யெனத் தெளிவார்!

ஆச்சாரத்தைக் கட்டி அழுபவர்
அதனுள் மூழ்கியே அழிவார்!
அன்றே பெரியார் எழுப்பிய கேள்விக்கு
இன்றும் பதிலின்றி நெளிவார்!

மூடத்தனங்களை விதைப்பதில் சிலரிங்கு
மூளையைக் கசக்கிப் பிழிவார்!
பெரியார் என்ற பெயரைக் கேட்டால்
தெறித்து ஓடி அவர் ஒளிவார்!

தீராத வெறியுடன் திராவிடம் வீழ்த்த
திருடர்கள் சிலரிங்கு நுழைவார்!
ஈரோட்டுக் கிழவன் வேர்விட்ட மண்ணில்
இடுப்பொடிந்து அவர் விழுவார்!


 - நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome