Sunday, December 30, 2018

வேளாண்மை வேண்டும்

"நீரற்ற குடமும் நிழலற்ற தடமும்" என்கிற தலைப்பில் "எரியும் ஏடு" என்ற இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் பரிசு வென்ற எனது கவிதை....

நீரற்ற குடமும்
நிழலற்ற தடமும்
நிகழ்கால உலகின்
நீங்காத அவலம்!

ஆறற்ற ஊரும்
அழிவுற்ற உழவும்
அடித்தட்டு நிலைக்கு
அகிலத்தை நகர்த்தும்!

கூரற்ற மதியும்
குறுகிவிட்ட நதியும்
குறிப்பிட்ட எதற்கும்
உதவாமல் சிதையும்!

சீரற்ற மழையும்
சிரிப்பற்ற மனையும்
சிறப்பான எதையும்
சேராமல் விலக்கும்!

கேடுற்ற காற்றும்
காடற்ற நாடும்
மேகத்தின் வரவை
மெதுவாக இழக்கும்!

ஓய்வற்ற உழைப்பும்
நோயற்ற உடலும்
ஒப்பற்ற வாழ்வை
உனக்காக வழங்கும்!

ஊரோரக் குளமும்
உழுகின்ற நிலமும்
உயிருள்ள வரைக்கும்
உனைக்காக்கும் நிதமும்!

ஏரோட்டும் கூட்டம்
இருக்கின்ற வரைக்கும்
ஏமாற்றமில்லா
எதிர்காலம் இருக்கும்!

நேரற்ற வழியும்
நெறியற்ற தொழிலும்
நேற்றோடு போதும் - இனி
வேளாண்மை வேண்டும்!


- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome