Sunday, December 30, 2018

தீக்குச்சிக் கவிதைகள்

திருப்தியின்றியே மரணிக்கின்றன
தினந்தோறும் சில தீக்குச்சிகள்!
சிகரெட்டுக்கு உயிர்கொடுத்துவிட்ட
சிறியதொரு குற்ற உணர்வினால்!
---------------------------------------------------------------------
நமத்துப்போன தீக்குச்சிகள்
நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளன
தங்களை நனைத்துச் சென்ற மழைத்துளிகளுக்கு!
---------------------------------------------------------------------
தீர்ந்துபோன தீப்பெட்டியில்
மீந்திருக்கும் ஒற்றைக் குச்சியில்
ஒட்டியிருக்கிறது கொஞ்சம் மருந்தும்
நிறைய மரண பயமும்!
---------------------------------------------------------------------
தீப்பெட்டிச் சிறையில்
தீர்ப்பெழுதப்பட்ட மரண தண்டனைக் கைதிகளாய் தீக்குச்சிகள்!
தவறேதும் செய்யாதபோதும்
தலை கருகி உயிர் விடுகின்றன
தண்டனை என்ற பெயரில்!
---------------------------------------------------------------------
பொத்திப் பாதுகாத்த
வத்திப்பெட்டியே
"போ வெளியே" எனத் துரத்துவதால்
அதன் பக்கவாட்டில் மோதியே
தற்கொலை செய்துகொள்கின்றன
தீக்குச்சிகள்!
---------------------------------------------------------------------
விதி முடியும் நேரத்திலும்
சில விளக்குகளுக்கு ஒளியேற்றிவிட்டே
விடைபெறுகின்றன தீக்குச்சிகள்!

No comments:

Post a Comment

Comments are always welcome