Sunday, December 30, 2018

மன்னித்துவிடு மது


கேரளாவில் மது என்கிற மன நலமற்ற இளைஞன் அரிசி திருடிய குற்றத்திற்காக அடித்துக் கொல்லப்பட்டபோது அழுகைக்கும் ஆத்திரத்திற்கும் மத்தியில் நான் எழுதிய கவிதை....

மரத்துப்போன மனதோடு
மறுபடியொருமுறை
வெட்கித் தலைகுனிகிறது
மானுடம்!

அகிம்சை தேசம் தன்
அங்கமெங்கிலும்
அவமானமள்ளிப்
பூசிக்கொண்டிருக்கிறது!

நாகரீகச் சமூகத்தின் நாற்றம்
நரகலையும் விஞ்சி நிற்பதை
மறுபடியும் நிரூபித்திருக்கிறது
மதுவின் மரணம்!

மண்டியிட்டுக் கேட்கிறோம்
மன்னித்துவிடு மது!

எங்கள் கருணையைப்
புதைத்த இடத்தை நோக்கி
கல் எறிந்திருக்கிறது
உன் மரணம்!

சித்தம் கலங்கியது
யாருக்கென்பதை
நீ சிந்திய இரத்தம்
விளக்கிவிட்டது !

மன்னித்துவிடு மது....

கம்யூனிச மற்றும்
காந்திய இரைச்சலில்
காது செவிடான எங்களுக்கு
நீ கதறிய ஓசைகள்
கடைசிவரை கேட்கவேயில்லை!

மன்னித்துவிடு மது....

உன் பரிதாபத்திற்குரிய சாவு
எங்கள் பரிணாம வளர்ச்சியை
படுதோல்வியடையச் செய்திருக்கிறது!

உன் குருதிக்கு பொறுப்பேற்று
குரங்கிலிருந்து மனிதரானதை
குற்றமென ஒப்புக்கொள்கிறோம்!

மன்னித்துவிடு மது...

அரசியல் திருடர்கள்
அரசாளும் வரையில்
அரிசித் திருடர்களுக்கு
மட்டுமே இங்கு
அதிகபட்ச தண்டனை!

அதிலும்

மூட்டைக் கணக்கில்
திருடும் கூட்டத்தை
கோட்டைக்கு அனுப்பிவிட்டு
மூன்று படி அரிசிக்காக
மூச்சை நிறுத்தும்
முற்போக்குவாதிகள் நாங்கள்!

 மன்னித்துவிடு மது...

உனக்காக சிந்தப்படும்
ஒரு சில துளி கண்ணீரிலும்
முடை நாற்றம் மட்டுமே
முழுதாக எஞ்சியிருக்கிறது!

ஆனாலும் ஒரு உண்மையை
உன் ஆத்மா உணரட்டும்...
மது என்ற மனிதனும்
அவனோடு இறந்த மனிதமும்
ஸ்ரீதேவியின் மரணத்திலும்
சில நடிகர்களின் அரசியலிலும்
சீக்கிரமே கரைந்துபோகும்
சிற்சில நாளில் மறந்துபோகும்!

இன்றைய தேதியில்
இடுகாட்டு மண்ணில்
புதைபடக் காத்திருப்பவை
இரண்டு விடயங்கள்!

ஒன்று
மதுவின் பிரேதம்

மற்றொன்று
மனித நேயம்!


- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome