Sunday, December 30, 2018

மற்றொரு கவிதை

மற்றொரு கவிதை
என் நீண்ட நாள் காதலை
நிராகரித்து வந்த நீ,
திடீரெனெ ஒரு நாள்
என் திசை நோக்கி வந்து,
என் கரம் குலுக்கி வாழ்த்தினாய்!
நான் கவிதைப் போட்டியில் வென்றமைக்கு

நன்றி என்றேன்
நடப்பதை நம்ப இயலாமல்!

பரிசு வென்ற கவிதையைப்
படித்துக் காட்டச் சொன்னாய்!

முன்பொருநாள் நீ கசக்கியெரிந்த என்
முதல் காதல் கடிதமே அது என்றேன்!

சட்டெனத் தலை கவிழ்ந்து
எனைச் சங்கடப்படுத்தினாய்!
கண்ணீர்த் துளியனுப்பி
உன் காலனி நனைத்தாய்!

உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!

வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

No comments:

Post a Comment

Comments are always welcome