Saturday, December 29, 2018

எச்சில் வாழ்க்கை

எச்சில் வாழ்க்கை
வெட்டு குத்து கொலையெல்லாம்
வெட்கமின்றி செய்துவிட்டு

தேசத்தினைச் சுரண்டவேண்டித்
தேர்தலிலே போட்டியிட்டு

கட்டுக் கட்டாய்ப் பணமிரைத்து
கள்ள ஓட்டில் வெற்றி பெற்று

ஓட்டு போட்ட கூட்டத்தினை
ஓட்டாண்டியாய் ஓடவிட்டு

ஊரை அடித்து
உலையில் போட்டு
ஊழல் செய்து
பணமும் சேர்த்து

சாக்கடையாய் ஒரு வாழ்க்கையினை
சங்கடமின்றி வாழ்ந்துவிட்டு

சுத்தமான பொய்கள் கொண்டு
சுயசரிதை எழுதிவிட்டு

மகாத்மா எனும் பெயரெடுக்க
மடத்தனமாய் கனவுகாணும்
மானம் கேட்ட ஜென்மங்களே!
மனிதக் கழிவின் எச்சங்களே!

அரும்பெரும் அரசியலை
அருவெருப்பாய் ஆக்கிவைத்த
ஆடை கட்டிய அசிங்கங்களே!
மிடுக்காய் உலவும் மிருகங்களே!

எச்சில் வாழ்க்கை இதுவென்று
என்றைக்கு உணர்வதாய்த் திட்டம்?
உங்கள் கட்சிக் கொடியின் கம்பம்கூட
உங்களைக் கயவன் என்று திட்டும்!

மனிதத் தன்மை மறந்த நீங்கள்
மலத்தைக் காட்டிலும் மட்டம்!
மக்களின் கால்களில் விழுந்தால்தான்
இனி மன்னிப்பாவது கிட்டும்!

No comments:

Post a Comment

Comments are always welcome