Sunday, December 30, 2018

நாக்கு எனும் நச்சுப்பாம்பு

பற்களுக்குப் பின்னே
பாதுகாப்பாய்
சிறை வைத்தும்
முற்களாய் கீறும்
சொற்களை வீசி
முன்னிருப்பவர் மனதை
முடமாக்கி விடுகின்றன
சில முன்கோபிகளின்
முரட்டு நாக்குகள்!

ஈர நாக்குகள் உதிர்க்கும்
ஈரமற்ற வார்த்தைகளால்
பாரமேறித் தவிக்கின்றன
பாதிக்கப்படும் இதயங்கள்!

தேக்கு உள்ளங்களையும்
தேங்காயாய் உடைத்துவிடுகிறது
நாக்கு எனும்
நச்சு ஆயுதம்!

கோபம் கொண்ட நாக்குகள்
கோடறியாய் மாறும்போது
பாவப்பட்ட சில நெஞ்சங்கள்
காயப்பட்டு சிதைகின்றன்!

எலும்பில்லா நாக்கில் எழும்
வரம்பில்லா வார்த்தைகளால்
வலுவான பந்தங்களும்
பழுதாகி உடைகின்றன!

ஈனச் சொற்களை
இறைத்த பின்னர் சில
தீ நாக்குகள்
திருப்தி கொள்ளலாம்!
ஆனபோதும்
அடுத்து ஒரு நாள்
அதே வார்த்தைகள்
உன்னைக் கொல்லலாம்!

நடுங்கவைக்கும் நாகத்திற்கும்
நஞ்சு என்பது
நாவில் இல்லை!
மனித நாக்குகள்
வடிக்கும் விஷத்தில்
பாதியும் கூட
பாம்பில் இல்லை!

நாக்கின் நீளம்
வளரும் போது
நாகரீகமும்
வளர்தல் வேண்டும்!

நாக்கு என்பது
நாய்க்கும் உண்டு
நமக்கும் அதற்கும்
வேற்றுமை வேண்டும்!

- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome