Sunday, December 30, 2018

விழி திறந்தால் விடியல்

முன்பு உடன்கட்டை என்ற பெயரில்
உயிரோடு எரித்தீர்கள்!
கருகி மடிந்தோம்!

முடியை மழித்து முக்காடு போட்டு
மூலையில் கிடத்தினீர்கள்!
முடங்கிச் சரிந்தோம்!

வெள்ளையுடை தவிர
வேறு வேண்டாம் என்றீர்கள்!
வெந்து தணிந்தோம்!

பூ நகை பொட்டெல்லாம்
புறக்கனிக்கச் செய்தீர்கள்!
புழுங்கித் துடித்தோம்!

மங்கள நிகழ்ச்சிகளில்
மறந்தும் தலை காட்டாதே என்றீர்கள்!
மனம் வதைந்தோம்!

பெரியார் என்ற
பெருநெருப்பின் கதகதப்பில்
உங்கள் சாத்திரக் குளிர்
சற்றேனும் விலகியது!

இதோ இன்று அடுத்த சாதி
ஆண்களை மணந்தால்
ஆணவக் கொலை செய்கிறீர்கள்!

எங்களை மூளியாக்குவதிலும்
மூலையில் கிடத்துவதிலும்தான்
தங்களுக்கு எவ்வளவு ஆர்வம்!

உங்கள் வக்கிரப் பசியடங்க
வருங்காலத் திட்டங்கள்
வேறென்ன வைத்திருக்கிறீர்கள்?

கன்றுக்குட்டிகளாய் உங்கள்
கால்சுற்றிக் கிடக்கவேண்டும்
என்பதுதான் உங்கள்
கடைசி இலக்கா?

ஆதிக்க வெறியர்களே,
அடிக்கோடிட்டு இதை
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!

எங்களை நசுக்க வேண்டி
நீங்கள் எடுக்கும்
நகர்வுகள் அனைத்தும்
நங்கூரங்கள் சிலவற்றை
நட்டுக்கொண்டுதான் இருக்கின்றன
எங்கள் நடுநெஞ்சில்!

முன்னிலும் உறுதியாய்
முளைத்து நின்று
உங்கள் முயற்சிகளின் மூக்கறுப்போம்!
தோசை சுடுவதே எங்கள் தொழில்
என்கிற தோற்றத்தைத் தோற்கடிப்போம்!

மேலும் பல மேரி கோம்களாய்
மேற்குலகம் வியக்கும் மேதாவிகளாய்
எங்கள் இருப்புகளை இருமாப்புடன்
பதிவு செய்யக் காத்திருக்கிறோம்!

வக்கிரச் சிந்தனைகளுக்கு நடுவே
வயிற்றெரிச்சலுக்கும் கொஞ்சம்
மருந்து தயார்செய்துகொள்ளுங்கள்!

ஆணவக் கொலையாளிகள்
உங்கள் ஆணவம் கொல்ல
கூர்தீட்டப்பட்ட எங்கள் ஆயுதங்கள்
குறிபார்த்துக் காத்திருக்கின்றன!

நாங்கள் விழி திறந்தாலே
இனி விடியல்தான்!
நாளைய உலகம் இனி
எங்கள் பிடியில்தான்!

- நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome