Sunday, December 30, 2018

காயப்பட்ட தமிழினமே

 
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்த சமயத்தில் தீயாய் எறிந்த மனதிற்கு தீனி போட்ட என் கவிதை....

என்ன பாவம் செய்ததெங்கள் தமிழினம்? 
எதற்கு இந்த அவல நிலை அனுதினம்? 

தாமிர உருக்காலையாலே ஒரு புறம் 
தர மறுக்கும் காவிரியால் மறுபுறம்! 
தத்தளித்து தவிக்கின்றோம் தினம் தினம்! - இது 
தரம்கெட்ட அரசுகளால் வந்த தரித்திரம்! 

ஸ்டெர்லைட்டினால் செத்து செத்து பிழைக்கிறோம்! - அது 
செயல்படவே கூடாதென்று எதிர்க்கிறோம்! 
செவிடன் காதில் சங்கெனவே இருந்திடும் 
செயல்படாத அரசதனை வெறுக்கிறோம்! 

இரசாயனக் கழிவுகளால் சிதைகிறோம்! 
இரவு பகல் இருமி இருமி வதைகிறோம்! 
இதய நோயை இலவசமாய்ப் பெறுகிறோம்! 
இறுதியிலே புற்று நோயால் இறக்கிறோம்! 

ஆலையினை மூடச் சொல்லி அழுகிறோம்! 
அச்சத்தோடு உறங்கச்சென்று எழுகிறோம்! 
நிலத்தடி நீர் நஞ்சாகக் காண்கிறோம்! 
நிலைகுலைந்து நிர்கதியாய் நிற்கிறோம்! 

உரிமையிருந்தும் காவிரியை இழக்கிறோம்! 
உபரி நீரை மட்டும்தானே பெறுகிறோம்? 
உச்சநீதி மன்றத்தினை அணுகியும் 
உள்ளம் நொந்து ஊமைக்கண்ணீர் வடிக்கிறோம்! 

வருடம்தோறும் வஞ்சிக்கப்படுகிறோம்! 
வறண்ட நிலத்தில் வாழ்வைத் தொலைத்துவிடுகிறோம்! 
வாய்கிழிய பேசும் சிலரை நம்பியே  
வளமனைத்தும் இழந்து வருத்தப்படுகிறோம்! 

மேலாண்மை வாரியத்தில் மெத்தனம்! 
மேட்டூர் அணை நிரம்புவது எக்கணம்? 
மேகதாதில் புதிய அணை வருமெனில் -இனி 
மேகம் கருணை கொண்டால் மட்டுமே நீர் வரும்! 

இனி ஒன்றுபட்ட எழுச்சியொன்றே வெல்லும்! - நாம் 
ஓய்ந்துவிட்டால் விடியல் விலகிச் செல்லும்! - நம் 
ஒட்டுமொத்த கரங்கள் ஒன்று சேர்ந்தால் 
ஓட்டுப் பொறுக்கிக் கூட்டம் ஒளிந்துகொள்ளும்! 

காயப்பட்ட தமிழினமே புறப்படு! 
காவிரிக்கும் ஸ்டெர்லைட்டிற்கும் குரல் கொடு! 
கண்ணீரால் இனி பலனில்லை உணர்ந்திடு! 
கதவு திறக்கக் காத்திராதே உடைத்திடு! 

    - நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome