Monday, December 12, 2022

பேய்

 

கருப்பண்ணசாமி கோயில்ல
காலைலயே கூட்டம்!
உடுக்கச் சத்தம்
ஊரையே மெரட்டுது!
முத்துராசு பொண்டாட்டிய
முனியடிச்சிருச்சாம்!
அப்படித்தேன் பேசிக்கிட்டாக ஊருக்குள்ள!
அங்குட்டு
புருவம் வரைக்கும் பூசுன விபூதிப்பட்ட,
நடுவுல சதுரமுமில்லாம வட்டமுமில்லாம
சந்தனப்பொட்டு குங்குமம்னு
கையில உடுக்கயோட
கண்ண உருட்டிக்கிட்டு நிக்கிறாரு
பூசாரி!
எதுத்தாப்புல எதையோ வெறிச்சமேனிக்கு
எனக்கென்னான்னு நிக்குது
முத்துராசு பொண்டாட்டி மரிக்கொழுந்து!
கும்புட்ட கை கும்புட்டமேனிக்கு
பம்மிக்கிட்டு நிக்கிறாப்ல முத்துராசு
அவ முதுகுக்கு பின்னாடி !
"ஏய்....வந்துருக்கது யாருன்னு சொல்லு"
வறட்டுக் கத்தா கத்துறாரு பூசாரி!
மசுரே போச்சுன்னு நிக்குது மரிக்கொழுந்து!
"வகுத்துப்புள்ளக்காரின்னு பாக்குறேன்...
இல்லன்னா வரி வரியா உரிச்சுப்புடுவேன்!"
சவுக்க கண்ணுல காட்டி
சத்தம் போட்டுப் பாக்குறாரு...
சட்ட பண்ணல மரிக்கொழுந்து!
"பேய் முனியா இருக்குமோ?"
பூசாரி காதுல குசுகுசுன்னு கேக்குறாப்ல
முத்துராசோட மூனாம் பங்காளி முருகேசன்!
"ஊமக் காட்டேரி உள்ள எறங்கியிருக்கு... அதேன் பேசமாட்டிங்குது புள்ள"
புதுசா கொளுத்திப் போட்டு
பீதியக் கெளப்புறாரு பூசாரி!
"காட்டேரியோ கரகாட்டக்காரியோ..
வெரசா வெரட்டி விடுங்க பூசாரி..
வேல கெடக்கு"
தெனாவட்டா பூசாரியவே அரட்டுது
மரிக்கொழுந்து மாமியா மாகாளி!
"நாளையிலருந்து நாலு நாளைக்கு
நடுச்சாம பூச பண்ணுனா எதுவா இருந்தாலும் எறங்கி ஓடீரும்"!
அந்த நேரத்துல அதேன் வந்துச்சு பூசாரி வாயில பாவம்!
கூட்டம் கலைய ஆரம்பிக்க
பொத்துனாப்ல பொண்டாட்டிய கூட்டிட்டுக் கெளம்புறாப்ல முத்துராசு!
"மூனாவதும் பொட்டப் புள்ளயப்
பெத்துப் போட்டீனா,
மூட்ட முடிச்சக் கட்டிக்கிட்டு
ங்கொப்பென் வீட்டுக்கே போயிறு"ன்னு மாமியாக்காரி சொன்னது ஒரு பக்கம்....
வகுத்துல இருக்கது பொட்டப்புள்ளதேன்னு
முந்தாநேத்து சந்த வாசல்ல கிளிசோசியக்காரன் சொன்னது இன்னொரு பக்கம்!
ரெண்டையும் மாறி மாறி
ரோசன பண்ணி
மண்ட காஞ்சு கெடக்குது மரிக்கொழுந்துன்னு
பேயோட்டுற பூசாரிக்கும் தெரியல!
அவரு வாயப் பாத்து நின்ன முத்துராசுக்கும் தெரியல!
அவசரமா பேயோட்ட வேண்டியது
அந்தப் புள்ளயோட மாமியாகாரிக்குதேன்னு நெனச்சோ என்னமோ
அங்கிட்டு வழக்கத்தவிட ஆவேசமா நிக்கிறாரு
வடக்க பாத்து கருப்புசாமி!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome