நட்ட நடுச் சாமம்!
ரெண்டு ரெண்டர மணி இருக்கும்!
அமைதிய கிழிச்செறிஞ்சு
அடிவயித்தக் கலக்குது அந்த சத்தம்!
ஊள விட்டு கொலச்சுத் தள்ளுது
ஊரு நாயெல்லாம் கூட சேந்து!
கிடுகிடுன்னு கெளம்பி
கெழக்கு மேற்கா நகருது அந்த
குடுகுடுப்ப சத்தம்!
சத்தம் நெருங்க நெருங்க
சஞ்சலம் வருது சனங்க மனசுல!
சாமக் கோடாங்கி வாக்க நெனச்சு
சங்கடப்படுதுக சாமத்து இருட்டுல!
சாவடி தாண்டி ஊரு நொழஞ்சு
சந்து சந்தா புகுந்து வருது
சாமக் கோடாங்கியோட
குடுகுடுப்ப சத்தம்!
நம்ம வீட்டு வாசல்ல நின்னு
என்ன வாக்கு சொல்லப் போறானோன்னு
ஏகத்துக்கும் பயப்படுதுக
சாகக் கெடக்குற பெருசுக சில!
கெட்ட வாக்கு எதுவும் வந்துரக்கூடாதுன்னு
குட்ட முனிய வேண்டிக்குது
வட்டிக்கட பால்ராசு பொண்டாட்டி!
கண்டதையும் சொல்லீருவானோன்னு
காது பொத்திப் படுத்துக் கெடக்கு
காலு வெளங்காத
காத்தாயி கெழவி!
தப்பா கிப்பா
ஒளரி வச்சுறப்போறான்னு
தனக்குள்ள பொலம்பித் தவிக்கிது
தலப் பிரசவத்துக்கு
ஊருக்கு வந்துருக்குற
தலையாரி செல்லப்பாண்டி மக!
கோளாரா எதுவும் சொல்லலன்னா
கோயிலுக்கு வந்து வெளக்கேத்துறேன்னு
மனசுக்குள்ள நேந்துக்குது
மச்சு வீட்டு பெரியாத்தா!
அபச குணமா எதுவுஞ்
சொல்லீரக்கூடாதுன்னு
அவகவுக கொல சாமிய வேண்டிக்கிறாக
அச்சப்படுற அம்புட்டு சனமும்!
அங்குட்டு
தெலுங்கு பாதி
தமிழ் பாதின்னு
கலந்து பேசி வாக்குச் சொல்லி
கடந்து வாராரு கோடாங்கி
கதவு வாசல் ஒன்னு விடாம!
சீல ரவிக்க பொஞ்சாதிக்கு!
சீப்பு சோப்பு சின்ன மகளுக்கு!
காலேஜு பீசு பெரியவளுக்கு!
நாளைக்கு வசூல நெனச்சு
நடுங்கிக்கிட்டே நடந்து வாராரு
நடுப்பட்டி சாமக் கோடாங்கி
நடு நடுவுல ஜக்கம்மாவ கும்புட்டபடி!
- நிலவை பாா்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome