முன்பின் அறியா சிலர்
விருப்பக் குறியீடுகளுக்காக
விழிகள் ஏங்குவதும் இங்குதான்!
கருப்பு வளையமிரண்டை
கண்கள் வாங்குவதும் இங்குதான்!
உள்ளிருந்த சில திறமைகள்
உயிர் பெறுவதும் இங்குதான்!
கல்லெறிந்து சிலர் மனதை
காயம் செய்வதும் இங்குதான்!
பொன்னான பொழுதுகள் பல
பொசுங்கிப் போவதும் இங்குதான்!
புண்ணான மனம் சில கணம்
புத்துணர்வடைவதும் இங்குதான்!
பள்ளிப் பருவக் காதலியை
கள்ளத்தனமாய் தேடுவதும் இங்குதான்!
இல்லை இங்கவள் என்றறிந்து
இதயம் வெம்புவதும் இங்குதான்!
கைபேசி திரை தேய்த்து
கட்டைவிரல் களைப்பதும் இங்குதான்!
பொய்பேசித் திரிபவர்கள்
போற்றப்படுவதும் இங்குதான்!
புழுதிக் கறை படியாமல்
புரட்சி செய்வதும் இங்குதான்!
புரளி, பொய் வதந்திகள்
புகுந்து விளையாடுவதும் இங்குதான்!
குடும்பத்திற்கான நேரத்தை
விரும்பி தொலைப்பதும் இங்குதான்!
குழம்பு ரசம் வைத்தாலும்
கூவிப் பிதற்றுவதும் இங்குதான்!
முகமறியா சிலர்
முகவரி பெறுவதும் இங்குதான்!
முக்காடு போட்டு சில
முதலைகள் உலவுவதும் இங்குதான்!
காலை எழுந்தவுடன் பலர்
கண் விழிப்பதும் இங்குதான்!
இதன் ஆழம் தெரியாத சிலர்
அடிமையாவதும் இங்குதான்!
- நிலவை பாா்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome