Monday, December 12, 2022

முட்டா பய மவனுங்களா

 

"அடுத்த புள்ள ஆம்பளப் புள்ளதேன்"
அடிச்சு சத்தியம் பண்ணாக
அரசபட்டி சோசியரும்
கோடாங்கித் தாத்தாவும்
இப்ப மகளுக்கு
பொம்பளப் புள்ள பொறந்தும்
அடுத்த மக கல்யாணத்துக்காக
அங்கனதான் போயி நிக்குறாக
சாதகத்தத் தூக்கிட்டு
பாண்டியம்மாளும் அவ பட்டாளத்து புருசனும்!
சகுனஞ் சரியில்லன்னு
நல்ல காரியத்துக்கு புறப்பட்ட
நாகராசு மாமாவ
மக்யா நாளு போகச் சொன்னாரு
மாரியாத்தா கோயில் பூசாரி!
மக்யா நாளு மதியான பஸ்ஸு
மரத்துல மோதுனதுல
மண்டை பொளந்துருச்சு மாமாவுக்கு!
அடுத்து எந்த திசையில
வைத்தியத்துக்கு போறதுன்னு
புருவம் வரைக்கு கட்டோட
பூசாரிட்ட போயி நிக்குறாரு மாமா!
வாஸ்துகாரவக ஒன்னுக்கு ரெண்டு பேர கேட்டு பாத்து பாத்து கட்டுன
புது வீட்ல
பத்து மாசமா பயங்கர சண்ட!
வடக்குப் பக்கம் வாசல மாத்துனா
எடக்கு எதுவும் வராதுன்னு
வாஸ்துக் காரன் சொன்னத நம்பி
மறுபடியும் வாசல பேக்குறாரு
மலேசியாவுல இருந்து வந்த மருதமுத்து!
பெருசா நாலு ஹோமம் வளத்தா
பெரிய ஆளா ஆயிராலாம்னு
பெருமாள் கோயில் அய்யரு அவக
பங்காளிகளோட வந்து
புகையடிச்சிட்டு போன
நாலே வாரத்துல
ஹோமம் வளத்த இடத்துக்கு நேர்மேல
தூக்கு மாட்டிச் செத்துப் போச்சு
தமிழ் வாத்தியாரோட
தங்கச்சி மக!
இப்ப தீட்டுக் கழிக்க
திரும்பவும் ஒரு ஹோமம் வளக்க
தயாராகிட்டு இருக்காரு
தமிழ் வாத்தியாரு!
"சாங்கியம் சடங்க எல்லாம்
செத்த நாளைக்கு கெடப்புல போட்டுட்டு
மனசுக்கு சரின்னு படறத மட்டும்
செஞ்சு பாருங்கடா
முட்டா பய மவனுங்களா"ன்னு
தண்ணியப் போட்டு வந்து
பஞ்சாயத்துக்கு நடுவுல சலம்புன
கீழத்தெரு மணிகண்டன் மேல
இப்ப பிராது குடுத்துருக்கு
முக்காவாசி ஊருசனம்!
நாளைக்கு சாஸ்தா கோயில்
சாமியாடி சொல்றபடி
தண்டன குடுக்கப் போறாக
அந்தத் தறுதலப் பயலுக்கு!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome