Saturday, September 18, 2021

விவசாயம் செழிக்கட்டும்

 

இது உழுது சிவந்த கரங்கள் இணைந்து
எழுதும் புதிய சரித்திரம்!
அழுது களைத்த விழிகளில் இனி
அக்கினிப் பொறி தெறித்திடும்!
இழந்த உயிர்கள் இருபதெனினும்
கிளர்ச்சி இன்னும் கிளைவிடும்!
விழுந்து எழுந்த அலைகள்தானே
விரைவினில் சென்று கரைதொடும்?
கழுகுகளின் பகல் கனவை
கலப்பைகள் இனி கலைத்திடும்!
விழுது சுமக்கும் கிளைகளை சிறு
விசைகள்தானா முறித்திடும்?
பொழுது விடியும் தருணம் வரையில்
நிலவும் இருளா நிரந்தரம்?
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு
சிலந்தி வலைக்கா சிறைபடும்?
எழுக எழுக எமது தோழா
எதிரிகள் குலை நடுங்கட்டும்!
எரிமலையுனை எதிர்க்க இங்கு
எவருண்டு களமிறங்கட்டும்!
புரட்டிப் போடும் புயல் இதுவென
புவியெங்கும் இன்று புரியட்டும்!
புரட்டு வாதம் புரியும் அரசு
புலிகளின் பலம் அறியட்டும்!
அடக்குமுறை அம்புகளின்
முனைகள் அனைத்தும் முறியட்டும்!
வடக்கில் கிழித்த வத்திக்குச்சி
தெற்கில் விழுந்து தெறிக்கட்டும்!
உழவர்களின் முழக்கங்களால்
தலைநகர் தணலாகட்டும்!
கயவர்களின் மசோதாக்கள்
கழுதைக்கு உணவாகட்டும்!
விடியல் ஒன்று பிறந்து மீண்டும்
விவசாயம் செழிக்கட்டும்!
விதைப்பவனை வதைக்கும் அரசை
நமது விரல் மை ஒழிக்கட்டும்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome