புயல் வெள்ளம் நோயற்ற
புது பூமி வேண்டும்!
புகழ்ச்சிக்கு மயங்காத
புலமையது வேண்டும்!
சுயநலங்கள் இல்லாத
சுற்றமது வேண்டும்!
சுவர் தாண்டிப் போகாத
சுதந்திரங்கள் வேண்டும்!
இயன்றவரை பிறர்க்குதவும்
இரக்க குணம் வேண்டும்!
இறப்பதற்கு முன்பே என்
இலக்கடைய வேண்டும்!
உயர்வான எண்ணங்கள்
உள்ளமதில் வேண்டும்!
உயிர் விட்ட பின்புமிந்த
ஊர் போற்ற வேண்டும்!
கயவரை கண்டுணரும்
கண்களது வேண்டும்!
கடவுளுக்கு இணையாக
கருணையது வேண்டும்!
துயரங்கள் துடைத்தெறியும்
துணிவு அது வேண்டும்!
துளியளவும் கலங்காத
துறவு நிலை வேண்டும்!
பயம், துன்பம் எனைக் கண்டு
பயந்தோட வேண்டும்!
பணமின்றிப் போனாலும்
பகுத்தறிவு வேண்டும்!
முயற்சிகள் அனைத்திலும்
முழு வேகம் வேண்டும்!
முடக்கங்கள் இல்லாத
முன்னேற்றம் வேண்டும்!
தயவின்றித் தவிப்போரைத்
தழுவும் கரம் வேண்டும்!
தமிழர்க்கு ஒரு தேசம்
தனியாக வேண்டும்!
மயக்கத்தில் நமை வீழ்த்தும்
மது ஒழிய வேண்டும்!
மதவாதம் இல்லாத
மனித குலம் வேண்டும்!
அயல்நாட்டு மோகங்கள்
அகலும் நிலை வேண்டும்!
அழகான தமிழ்ப்பெயர்கள்
அதிகரிக்க வேண்டும்!
வயதுக்கு ஏற்றபடி
வாழ்க்கையது வேண்டும்!
வசிக்கின்ற இல்லத்தில்
வசந்தங்கள் வேண்டும்!
இயற்கைக்கும் இடம் தந்து
இனி வாழ வேண்டும்!
இயலாமை வரும் முன்னே
இறந்துவிட வேண்டும்!
- நிலவை பாா்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome