Saturday, September 18, 2021

தோழமைப் பூக்கள்

பள்ளிப் பருவ காலத்தில்
துள்ளித் திரிந்த தோழர்கள்
வெள்ளை முடிகள் வந்தபின்பு
ஒன்றாய்க் கூடும் வேளையிது! 

குரும்பில் திளைத்த கூட்டமொன்று
குடும்பத் தலைவன் ஆனபின்பு
குழுவாய்ச் சேரும் நேரமிது
குழந்தையாகட்டும் உள்மனது! 

தேக்கி வைத்த நினைவுகளைத்
தேடியெடுத்துப் பகிர்ந்திடவும்
தேனாய் இனிக்கும் நட்புறவை
தேகம் சிலிர்க்க உணர்ந்திடவும்
தோதாய் வந்தது தருணமொன்று
தோழமைப் பூக்கள் மலருமின்று! 

ஒன்றா இரண்டா நினைவலைகள்?
பண்ணிய சேட்டைகள் பல வகைகள்!
நட்பிற்கேது வரையறைகள்?
மறப்போம் இன்று மனக்குறைகள்!

அரிதாய் நிகழும் சந்திப்பில்
ஒருதாய் மக்கள் போல் இணைய
பெரிதாய் ஆசைகள் இருந்தாலும்
முடியாமல் சிலர் தவிக்கின்றோம்! 

இனிதே நடக்கட்டும் சந்திப்பு
இதயத்தில் கலக்கட்டும் தித்திப்பு
கவலைக்கு இன்று கதவடைப்பு!
களை கட்டட்டும் கலகலப்பு! 

சிரத்தை எடுத்த நண்பர்களை
சிரம் பணிந்து வணங்குகிறேன்!
வர இயலாமல் போனதற்கு
வலிகள் சுமந்து வருந்துகிறேன்! 

உயிரை இங்கு இருத்திக்கொண்டு
உணர்வை அங்கு அனுப்புகிறேன்
கண்ணில் கசியும் நீர்த்துளியை
இக்கவிதை கொண்டு அடக்குகிறேன்! 

நிறைந்த அன்புடன்,
நிலவை பாா்த்திபன்


 

No comments:

Post a Comment

Comments are always welcome