இப்பிரபஞ்சத்தில் நடமாடும் பிரம்மாண்டம்!
இவை பிளிறினாலே பின்வாங்கும் பிற மிருகம்!
தந்தங்கள் இவற்றின் தனிச்சிறப்பு!
தங்கத்திற்கு இணையானது இதன் மதிப்பு!
தும்பிக்கை தவழும் தரையோடு!
தூரப்பார்வை இதன் குறைபாடு!
காதாட்டி நடந்துவரும் கானகத்து நாயகன்!
வீதி முனை கோவிலிலே வீற்றிருக்கும் விநாயகன்!
வாழை, கரும்பு கண்டுவிட்டால் வாயூறும் இதற்கு!
வயிறு முட்ட தின்பதொன்றே
வாழ்வில் இதன் இலக்கு!
காட்டிற்கு அரசன் சிங்கம் என்று
கதைகள் பலவும் சொல்கிறது!
கர்ஜனை செய்யும் சிங்கமும்கூட
களிறுக்கு பயந்தே செல்கிறது!
அத்தனை பெரிய உருவத்தையும் சிறு
அங்குசம் அடக்கி விடுகிறது!
ஆயுதம் கண்டும் அஞ்சா யானை
அன்பிற்கு அடங்கிப் பணிகிறது!
நமக்குள் தொலைந்த கூட்டுக் குடும்ப முறை
வனத்தில் இன்னும் இருக்கிறது!
தமக்குள் கூடி வாழும் யானைகள்
நமக்கும் சொல்லிக் கொடுக்கிறது!
உறைவிடம் தேடி உலவிடும் யானைகள்
ஊருக்குள் வருவது தொடர்கிறது!
உணவைத் தந்து உயிரைப் பறிக்கும்
சிலரால் மனிதம் தொலைகிறது!
ஏனைய விலங்கை எடுபிடியாக்க
மானிடக் கூட்டம் துடிக்கிறது!
யானையைப் பழக்கி யாசகம் கேட்கும்
கேனத்தனங்களும் நடக்கிறது!
மதம் பிடிக்கும் யானையைக்கூட
மடக்கும் வழிகள் இருக்கிறது!
மதம் பிடித்த மனிதர்கள் சிலரின்
மடத்தனம் மறைய மறுக்கிறது!
- நிலவை பார்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome