Wednesday, January 08, 2014

அட்டையில் செய்த அச்சாணிகள்

சாதிக்கக் கட்சி
தொடங்கியது அன்று!
சாதிக்கொரு கட்சி
தொடங்குவது இன்று!

அரசியல் மேடைகளில் சிலர்
அணுகுண்டாய் முழங்கும்
நேர்மை,தூய்மை,வாய்மைகளுக்கு
தேர்தல்நேர விரல்மையைக்
காட்டிலும் ஆயுள் குறைவு!

இத்தேசத்தில் நடக்கும்
தேர்தலுக்கெல்லாம் ஏப்ரல்
ஒன்றாம் தேதியே
ஏதுவான நாள்!
அப்போதுதான்
முட்டாள்கள் தினம்
முழுமை பெறும்!

நம் வாக்குகள் அங்கு
சாகடிக்கப்படுவதாலேயே அதனை
"வாக்குச் சாவடி" என்கிறோம்!

மாற்றம்வேண்டி வாக்களித்ததில்
இன்றுவரை
நாற்றம் மட்டுமே மிச்சம்!

தேசத்தின் வரிப்பணமிறைத்துத்
தேர்தல் நடத்தி
இறுதியில் தேள்களைத்தானே
தேர்ந்தெடுக்கிறோம்?!

ஆட்சிக் கட்டில்
கிடைக்குமென்றால் இங்கு
மரணப் படுக்கைகூட
சிலருக்கு மகிழ்ச்சியே!

அரசியல் அரங்கில்,
தன்னலம் தலைவாசல்
வழி நுழைவதும்,கொள்கைகள்
கொல்லைப்புறத்தில் வெளியேறுவதும்
வெளிப்படையான வெட்கக்கேடுகள்!

அட்டையில் செய்த
அச்சாணிகளாய் சில
அட்டூழியக்காரர்கள் இருக்கும்வரை
ஆரோக்கியப் பாதை நோக்கி
அசைவதெங்கே அரசியல் தேர்?

No comments:

Post a Comment

Comments are always welcome