Wednesday, November 27, 2013

இது கம்மல் அல்ல காதல்

இது கம்மல் அல்ல காதல் 


வலிய வந்து பழகி எந்தன்
வலியனைத்தும் துடைத்தாய்!
விழியழகை வைத்தே எனை
விடிய விடிய வதைத்தாய்!

சிரிப்பு எனும் சிதை மூட்டி என்
சின்ன இதயம் சிதைத்தாய்!
கள்ளிக்காடாய் கிடந்த நெஞ்சில்
காதல் விதையை விதைத்தாய்!

கணவன் என்றால் நீதான் என்று
காதின் ஓரம் கதைத்தாய்!
காதல் கணைகள் கண்ணில் தொடுத்து
கனவை என்னுள் வளர்த்தாய்!

மீசை விலக்கி முத்தம் தந்து
மீண்டும் தரவா என்றாய்!
மீனைக் கொத்தும் பறவை போல
மனதைக் கொத்தித் தின்றாய்!

திங்களிரண்டு கடந்தபின்பு
திசையை மாற்றிப் பறந்தாய்!
திரண்டு வந்த வெண்ணைத் தாழி
திடீரென்று உடைத்தாய்!

சீமை மாமன் திரும்பிவர
சீக்கிரம் என்னை மறந்தாய்!
சீனச் சுவராய் வளர்த்த கனவை
சீட்டுக்கட்டாய் சரித்தாய்!

காதலன் என்னைக் கைவிட நினைத்த
காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால்
அது காதல் அல்ல வேறு!

அணைத்தவளே அறுத்ததனால்
அடிமனதில் கீறல்!
நீ நினைத்தபோது கழற்றிவிட
இது கம்மல் அல்ல காதல்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 25-Nov-13, 5:23 pm 

No comments:

Post a Comment

Comments are always welcome