Friday, January 10, 2014

காதலுக்குக் கண்ணில்லை!

காகிதத்தில் கவியெழுதிக்
காதல் சொன்னேன்!
முழுதாகப் படித்து முடித்து
"முட்டாள்" என்றாய்!

கைக்குட்டையில் இதயம் வரைந்து
கையில் தந்தேன்!
குப்பையிலே எறிந்துவிட்டு
"குட்பை" என்றாய்!

நெஞ்சமெல்லாம் நீதான்
என நெருங்கிச் சொன்னேன்!
நேற்று பார்த்த படத்தில்
வந்த வசனம் என்றாய்!

கண்ணாய் உனைக் காப்பேன்
என கலங்கிச் சொன்னேன்!
நாய் வளர்ப்பதில் நாட்டமில்லை
என்று நகர்ந்து சென்றாய்!

மிருதுவான உணர்வுகளை
மின்னஞ்சல் செய்தேன்!
மீசைக்கார மாமனனுப்பி
மிரட்டச் செய்தாய்!

"காலமெல்லாம் காத்திருப்பேன்"
எனக் காதில் சொன்னேன்!
காவல்துறை கதவு தட்டும்
எனக் கத்திச் சொன்னாய்!

கருணை காட்டவேண்டுமென்று
கனிவாய் கேட்டேன்!
கருனைக்கிழங்கைக் கையிலெடுத்துப்
பார்த்துக்கொள் என்றாய்!

என்ன செய்ய வேண்டும் எனைப்
பிடிப்பதற்கு என்றேன்!
ஏற்கனவே பிடித்துவிட்டது உனக்குப்
பைத்தியம் என்றாய்!

இறுதிவரை இணங்க மறுத்தால்
இறப்பேன் என்றேன்!
இயன்றவரை உதவுகின்றேன்
இன்றே இற என்றாய்!

கடைக்கண் திறக்காதா
காதல்? என்றேன்!
காதலுக்குக் கண்ணில்லை
எனக் கணக்காய் முடித்தாய்!


நிலவை.பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome