Friday, January 17, 2014

ஆக்ரா அனாதையாகிறது

(குறிப்பு: சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் தாஜ்மஹால் விரைவில் தரைமட்டமாகும் என்ற இடிசெய்தி கேட்டு என் பேனாவழி கசிந்த கவிதை இது. ஷாஜஹானின் காதல் தூய்மையானதா என்கிற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.
சேனைத் தமிழுலா எனும் வலைதளம் நடத்திய கவிதைப்போட்டியில்  இக்கவிதை மூன்றாம் பரிசைப் பெற்றது. )

ஆக்ரா அனாதையாகிறது

ஒரு சமாதியே இங்கு
சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று
விறகாகக் காத்திருக்கிறது!

சரித்திரம் ஒன்று
சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று
அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!

கல்லறையாய் நின்று
காதல் சொன்ன மாளிகை
சில்லறையாய் விழுந்து
சிதறப் போகிறது!

கல்லறையில் எழுதப்படும்
தோற்றம்-மறைவு -
முதன்முறையாக ஒரு
கல்லறைக்காக
எழுதப்படப் போகிறது!

காதலின் பெருமையை
இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது
கலங்கரை விளக்கம்!

ஈடில்லாப் பெருமையை
இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி
இதயம் வலிக்கும்!

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை
தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத
ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!

பொறியியல் சிற்பிகளுக்கோர்
பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அண்ணாந்து பார்க்க மட்டுமே
எங்களுக்குச் சம்மதம்!

அதைக் குனிந்து
பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும்
தவிர்த்திடுங்கள்!

வில்விடுத்த அம்பாகச்
செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம்
உங்கள் விஞ்ஞானமே மருந்து!

No comments:

Post a Comment

Comments are always welcome