Thursday, January 09, 2014

அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்!



வீரவணக்கம்!

சிங்கத்தைப் பெற்ற தங்கமே!
எரிமலையைச் சுமந்த பரிமளமே!

சூரியனைப் பிரசுவித்த மெழுகுவர்த்தியே!

தூங்கிப்போன தூயவளே!

கர்ம வீரனைப் பெற்று
களமாடத் தந்தாய்!
தர்மத் தாயாய் தமிழர்
நெஞ்சங்களில் நின்றாய்!

சிறந்த படைப்பிற்கு
நோபல் பரிசென்றால்,
சில நூறு நோபல்கள்
உனக்குத் தரலாம்!

எம் தலைவனை விடச்
சிறந்த படைப்பு
இத்தரணியில் வேறு உண்டோ!

உன் மறைவால் இன்று
வல்வெட்டி வாழாவெட்டி ஆனது!
நீ காலனை
வெல்வாய் என்ற
எம் கனவுகள்
காலாவதி ஆனது!

வானத்து சூரியனைத் தந்தது
அந்தப் பால்வெளி என்றால்,
ஈழத்து சூரியனைத் தந்தது
எங்கள் அன்னை பார்வதி!

தேக நோய்களால்
வெந்தது பாதி!
சில துரோக நாய்களால்
நொந்தது பாதி!
இன்று எங்கள்
சத்தியத் தாயின்
சடலம் மட்டுமே மீதி!

தியாகத் தாயே! உன்னை
போற்றாது போனால்!
என் குருதியும் என்னைக்
குற்றம் சொல்லும்!
என் தமிழுணர்வு என்னைத்
தவணையில் கொல்லும்!

பாரம் சுமக்கும்
நெஞ்சோடு உனக்கு
வீரவணக்கம் செலுத்துகிறோம்!

No comments:

Post a Comment

Comments are always welcome