Saturday, January 18, 2014

படகுகளே பாடைகளாய்!

இனிமேலும் இடிதாங்க
இதயத்தில் வலுவில்லை!
விரக்தியிலே விழுந்த மனம்
இன்னும்கூட எழவில்லை!

இழப்பதற்கினி எதுவுமில்லை,
இறைவனுக்கும் இரக்கமில்லை!
இனி கடலுக்குள் கால்வைக்க
கனவில்கூட எண்ணமில்லை!

மிரட்டும் அலைகளும்
மீனவர் கொலைகளும்
இந்தியப் பெருங்கடலில்
இயல்பென்று ஆனது!

வலைகொண்டு கடல்செல்வதும்
கொலையுண்டு கரை சேர்வதும்
அன்றாடம் காணும்
அவலமாகிப் போனது!

இந்திய எல்லையை
இரண்டடி தாண்டினும்,
எங்கள் படகுகளே பாடைகளாய்!
நாங்கள் பலிபீடத்து ஆடுகளாய்!

உயிரைக் கையில்
பிடித்தபடிதான் வலையில்
மீனைப் பிடிக்கிறோம்!
துடுப்புகளோடு சேர்த்து இன்று
துன்பங்களையும் சுமக்கிறோம்!

ஆண்டுக் கணக்காய்
அழுதுவிட்டோம் அரசின்
உதவி நாடி!
இதுவரை அனாமத்தாய்
போன உயிர்கள்
ஐநூறையும் தாண்டி!

புத்தியை இழந்த
மத்திய அரசே!
நாங்கள் கத்தியபோது
செவி பொத்திய அரசே!

மீனவர் உயிரை
மீசை மயிராய்
துச்சமாய் எண்ணும்
துரோக அரசே!

மீன் பிடிக்கும்
எங்கள் கைகள்
இனி வாள்
பிடிக்க நேரும்!

எம் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும் இனி
கண்ணிவெடிகளாய் மாறும்!

நாம் பிச்சை
தந்த தீவை
அந்தப் பித்தர்கள்
ஆண்டது போதும்!

கச்சத்தீவை மீட்டால்தான்
இனி மிச்ச
உயிர்களாவது வாழும்!

No comments:

Post a Comment

Comments are always welcome