Sunday, November 09, 2025

அறுந்த வாலை ஆட்டாதீர்

 


2018 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர மாலிக் என்பவரது நூலை மேற்கோள் காட்டி "தமிழை ஆண்டாள்" என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பேசியத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையையும் அதன்பிறகான சனாதனிகளின் மிரட்டல்களையும் கண்டித்து எழுதப்பட்ட கவிதை....


வேசிமகன் 

என்கிறான் ஒருவன்

வெட்டுவேன் நாவை 

என்கிறான் மற்றொருவன்!


உண்ணா நோன்பிருக்கிறது

ஒரு கூட்டம்!

கொன்றாலும் தவறில்லையென்கிறது

இன்னொரு கூட்டம்!


வெட்டிவீரம் பேசும்

முட்டாள் குரங்குகளே

வெட்டுவது இருக்கட்டும் - முதலில்

தொட்டுத்தான் பாருங்களேன்?


மேற்கோள் காட்டியதற்கே

போர்கோலம் பூண்டு நிற்கும்

பூனூல் புலிகளே!

ஆரியத்து நரிகளே!


உன் கோத்திரன் இதை

உரைத்தபோது

போர்த்திப் படுத்துவிட்டு

சூத்திரன் இவரென்பதால்

ஆத்திரம் கொள்வீரோ?


அர்ச்சகனென்ற பெயரில்

ஆலயக் கருவறையுள்

ஆரேழு பெண்டிருடன்

அந்தரங்க ஆராதனை

அம்பியொருவன் செய்தானே...


அன்றும் இதுபோல் 

குதித்தீரா? - அன்றி

அதையும் மனதினுள் 

இரசித்தீரா?


சங்கரராமன் என்பவரை

சங்கறுத்துச் சாய்த்தபோது

எங்கு சென்று ஒளிந்தீர்கள்?

என்ன செய்து கிழித்தீர்கள்?


கோவிலென்றும் பாராமல்

கொன்று போட்ட அந்த 

கொடுஞ்செயலை

கோமிய விரும்பிகள்

எதிர்க்கவில்லை

கோபம் கொண்டு அன்று

கொதிக்கவில்லை! 


வாழ்வாதாரப் போராட்டங்கள்

வருடமெல்லாம் நிகழ்ந்தாலும்

வாய்திறந்த வழக்கமில்லை

வருந்தக்கூட மனமில்லை


இன்றோ

ஆண்டாளென்று வந்தவுடன்

அலறியடித்து அனைவருமே

கூண்டோடு வந்து குரலெலுப்பும்

குள்ளநரித்தனம் இதுவன்றோ!


சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் அவள் 

பாடிக்களித்த திருமொழியை

தேடியொருமுறை படியுங்கள்

பின்பு நீலிக்கண்ணீர் வடியுங்கள்!


பெய்யாத மழைத்துளி

மண் சேர்வதேது?

செய்யாத தவறுக்கு

மன்னிப்பு எதற்கு?


சிரத்திலிருந்து  பிறந்ததால்

சிறந்தவர் நீவிரென்றும்

நிறத்தினால் கருத்தவரை

வேறென்று வெறுத்தமைக்கும் 

நீவிரல்லவோ கோரவேண்டும்

நித்தமும் மன்னிப்பு?


முரட்டுத் தமிழினத்தை 

மிரட்டிப் பணியவைக்க 

வரட்டுக் கனவு காணும்  

குருட்டுப் பூனைகளை 

விரட்டி அடித்திடுவோம்!

அடக்கி ஒடுக்கிடுவோம்!


சண்டித்தனம் செய்துபார்க்க 

இது சாமியார் மடமில்லை!

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு 

இனியும் இங்கு இடமில்லை!


மனுதர்மச் சேட்டைகளை 

மறுபடி இங்கு காட்டாதீர்!

மறத்தமிழன் மண்ணில் நின்று 

அறுந்த வாலை ஆட்டாதீர்! 



                          - நிலவை பார்த்திபன்

Saturday, November 08, 2025

எடு செருப்ப


 

சாணி பீ திங்கும்
சாதிப் பன்னிகளா
சந்தோசமாடா இப்ப?
தண்ணித் தொட்டி
என்ன சாக்கடையா
நீ பேண்ட கருமத்த நெப்ப?
மொத்த ரத்தமும்
கொதிக்குதுடா உங்க
மொகத்துல காரி துப்ப!
மலத்தக் காட்டிலும்
நாறுதடா உங்க
மனசுல உள்ள குப்ப!
ஆண்ட பரம்பர
அசிங்கங்களா நீங்க
திருந்தப்போறது எப்ப?
மாண்டு மண்ணா
நீ போனாக்கூட
மறக்கமாட்டோம் உன் தப்ப!
சாமி கும்புட
கோயிலு வந்தா
சாதியச் சொல்லி தடுப்ப!
காப்பி கேட்டு
உன் கடைக்கு வந்தா
தனியொரு குவளையில் குடுப்ப!
சாமி வந்ததா
சாக்கு சொல்லி உன்
வன்மத்த வாந்தி எடுப்ப!
உன் நாத்தத்த மறைக்க
நாளொரு விதமா
நல்லவன் போல நடிப்ப!
விலகி வேணான்னு
போனா அவங்க
விலாவில் ஏறி மிதிப்ப!
என்னைக்குத்தான்டா மத்த சாதியையும்
மனுசப் பிறவியா மதிப்ப?
மெல்ல தலதூக்கி
எதுத்து கேட்டா
மேலயும் கீழயும் குதிப்ப!
சாகுற வரைக்கும் சங்கடப்படாம
சாதிச் சாக்கடையில் குளிப்ப!
எச்ச பய நீன்னு
தெரிஞ்சு போச்சுடா
என்ன செஞ்சு
இனி கிழிப்ப?
நாத்தம் புடிச்ச உன்
சாதித் திமிர வச்சு
நாக்க மட்டுந்தான் வழிப்ப!
இனியொரு பயலும்
அசைக்க முடியாது
இந்த மண்ணில்
சிலர் இருப்ப!
வேற மண்ணுல
போயி முடிஞ்சா
வேக வை
உன்னோட பருப்ப!
தீரத்தோட நின்னு போராடி இனி
வேரறுப்போம் உங்க வெறுப்ப!
எப்பவும்போல ஏறி மிதிச்சா
எடுப்போம் இனிமே செருப்ப!

- நிலவை பாா்த்திபன்

என்றென்றும் தமிழ்நாடு


 

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இங்கு தேள் கொட்டுதே
சிலர் காதினிலே!
எங்கள் தாய் தமிழ்
பூமியின் மீதினிலே
சில வந்தேரி
நாய் கூட்டம் வாலாட்டுதே!
யார் வைத்த பெயரை
யாரடா மாற்ற?
வக்கற்றுப் போனோமோ
நீ பெயர் சூட்ட?
எம் மண்ணில் நீ வந்து
உன் கொடியேற்ற
பேடிகளா நாங்கள்
வேடிக்கை பார்க்க?
ஆளாத உன் பெயர் ஆளுநரா?
அற்பனே நீயென்ன ஆண்டவனா?
ஆரியன் என்றாலே ஆணவமா?
எம்மினம் என்றாலே ஏளனமா?
தமிழ்நாடோ தமிழகமோ
நீ யார் அதைச் சொல்ல?
உன் தலைக்கனத்தை தரையிறக்க
இது உன் நிலம் அல்ல!
அனுமதியோம் இனியிங்கு
நீ கிடந்து துள்ள!
தரணியிலே எவருமில்லை
தமிழரெமை வெல்ல!
எழுவர் விடுதலைக்கு
எமனாக நின்றாய்!
இணையச் சூதாட்டத்தை
இருக்கட்டும் என்றாய்!
தமிழர் வரலாற்றினைத்
திரித்தாயே நன்றாய்!
நல்ல குடிகளின்
நம்பிக்கை கொன்றாய்!
என்றென்றும் தமிழ்நாடு
என்றே இனி உரைப்போம்!
எவரேனும் இடர் செய்தால்
ஏறி நெஞ்சில் உதைப்போம்!
வந்தேரிகள் வாய்க்கொழுப்பை
வளராது தடுப்போம்!
குள்ளநரிக் கூட்டமதன்
குரல்வளையை உடைப்போம்!

- நிலவை பாா்த்திபன்

கவிதை நேரங்கள்


 

கவிதையென நான்
எழுதும் எதையும்
கடுகளவும் இரசிப்பதில்லை
அவள்!
அவளுக்கான என் பொழுதுகளை
அவை அபகரித்துக்கொள்வதாக
ஆத்திரப்படுகிறாள்!
ஆனால்
இனிக்கும் தேநீர்
பொழுதுகளின்போதான
இதமான உரையாடல்கள்!
காலைச் சிற்றுண்டியின்போதான
காரசார விவாதங்கள்!
அலுவல் இடைவெளிகளின்போதான
அலைபேசி விசாரிப்புகள்!
வீடு திரும்பியது முதல்
விளக்கணைக்கும்வரை
விரிவாக அலசப்படும்
அன்றைய நிகழ்வுகள்
என அவளிடம்
களவுபோகும் அனைத்தும்
என் கவிதைக்கான நேரங்கள் என்பதை
கடைசிவரை சொல்லப்போவதில்லை அவளிடம்!

- நிலவை பாா்த்திபன்

பழகிருச்சு தம்பி


 

அவ்வப்போது நான் செல்ல நேரும்
ஆறு தளங்கள் கொண்ட
வணிக வளாகம் அது!
அதன் மின்தூக்கியை
இயக்கும் பொறுப்பில்
மீசை நரைத்த அந்த பெரியவரை
அநேக நேரங்களில் காண்கிறேன்!
தளங்களைக் குறிக்கும் பொத்தான்களின்
கீழமைந்த தாழ்வான ஒரு
முக்காலிதான் அவருக்கான இடம்!
கதவு திறந்து மூடு்ம் இடைவெளியில்
புகுந்து வரும் காற்று மட்டுமே
புதுப்பித்துக் கொண்டிருந்தது
அவரையும் அவ்வறையையும்!
சாளரமற்ற ஒடுங்கிய அறையில்
சலனமற்ற முகத்துடன்
போவோர் வருவோருக்காக
பொத்தான்களை அழுத்துவதொன்றே
அவரது பணி!
தகரக் கதவுகள் திறந்து மூடும்
சத்தம் மட்டுமே
அவரது தனிமையின் இடைவெளிகளைத்
தவணை முறையில் நிரப்பிக்கொண்டிருந்தன!
நடுநடுவே தலைகாட்டும்
மனிதர்களின் நடமாட்டம்
தான் நரகத்தில் இல்லையெனும்
நம்பிக்கையைத்
தந்திருக்கக்கூடும் அவருக்கு!
மூச்சை முட்டும் சிறிய அறை
இயந்திரம் கொண்டியங்கும்
அந்த இரும்புச் சிறை!
காலை முதல் மாலை வரை
மேலும் கீழுமாய் அதில் உழலும் நிலை!
எண்களை அவர் அழுத்தும் விதத்தில்
அவரது மன அழுத்தத்தின் தீவிரத்தை
மதிப்பீடு செய்ய முடிந்தது!
ஆயினும் கூட
எவ்வளவு நெரிசலிலும் அவர்
எரிச்சலடைந்து நான் பார்த்ததாக
எப்போதும் நினைவில்லை எனக்கு!
உங்களில் சிலரைப் போலவே
மேலோட்டப் பார்வையில் இது
கடினமற்ற பணியாகத் தோன்றிய எனக்கு
அம்முக்காலியில் எனை
இருத்திவைத்துக் கற்பனை செய்ததில்
மூன்றே நிமிடங்களில்
முகம் வியர்த்துப்போனது!
அளவு கடந்த பொறுமை இருந்தாலொழிய
அவ்வளவு எளிதன்று இப்பணி
என்பதை ஆழமாக உணரமுடிந்தது!
நானும் அவரும் மட்டும்
பயணப்பட்ட நண்பகல் தருணமொன்றில்
மெதுவாகக் கேட்டேன் அவரிடம்
"ஐயா இது கடினமாக இல்லையா?"
பற்கள் தெரியாமல் சிரித்து
ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்
"பழகிருச்சு தம்பி"
அந்த விரக்திச் சிரிப்பிலிருந்து
விழுந்து சிதறிக்கொண்டிருந்தது
அவர் விளக்க விரும்பாத
சில விசும்பல்கள்!
இப்படித்தான் பழகிக்கொண்டிருக்கிறது
பலருக்கும் இந்த வாழ்க்கை
பாரங்களுக்கும் பாதிப்புகளுக்கும்
மத்தியில்
வேறேதும் வழிகளின்றி!
இப்போதெல்லாம்
சிறு தடங்கல்களிலும்
சில நொடி தாமதங்களிலும்
பொறுமையிழந்து எரிச்சலுறும்போது
நினைவில் கொள்ளத் தவறுவதில்லை
அம்மின்தூக்கியையும்
அம்மனிதரின் புன்சிரிப்பையும்!
அதனினும் முக்கியமாய்
"பழகிருச்சு தம்பி" என்ற அந்த
பக்குவப்பட்ட வார்த்தைகளையும்!

- நிலவை பாா்த்திபன்

போராடுவோம்


 

திடுமென திசைமாறும் வாழ்வில்
திருப்பங்கள் சில நேரலாம்!
துடுப்புடைந்திட்ட படகெனவே
துன்பம் உன்னைச் சேரலாம்!
அடுத்தடுத்தெழும் அலைகடலென
அவலங்கள் உனைச் சூழலாம்!
எடுத்திடும் சில முயற்சிகளும்
எதிர்வினைகளால் வீழலாம்!
அடைமழை புயல் வெள்ளம் தன்னில்
அமிழ்ந்திடும் நிலை தோன்றலாம்!
இடையினில் சில இடர்கள் சூழ்ந்து
இதயத்தில் துயர் ஊன்றலாம்!
துயர் எது வந்து துரத்தும்போதும்
துணிவினை விடலாகுமா?
விடியலின்திசை தேட மறந்து
விரக்தியில் விழலாகுமா?
உணர்வலைகளில் உறுதியது
உருக்குலைவது நியாயமா?
உடைந்தழுது நீ உழல்வதினால்
உனது வினைகள் மாயுமா?
படும் கவலைகள் பரிதவிப்புகள்
பயம்கொள்ளும்வரை மாறுமா?
பலம்கொண்டவரை முயன்றிடும்வரை
கவலைகளது தீருமா?
உளி படுவதை வலியெனும்வரை
சிலை உயிர்பெறலாகுமா?
எளிதினில் மனம் தளர்ந்திடும்படி
இடம் ஒன்று தரலாகுமா?
விழிவிடும் நீர்த்துளிகள் துடைத்து
விடையெதுவென தேடுவோம்!
வழியது புலப்படும் வரையினில்
வலியுடன் போராடுவோம்!
அழிவுகள் நமை நெருங்கும்போது
அறிவினால் தடை போடுவோம்!
கடைசியில் நாம் களைப்படைந்திடும்
கணம்வரை களமாடுவோம்!
வருவது என்ன வரட்டும் என நம்
வலிமையை நிலைநாட்டுவோம்!
வருத்தங்கள் மட்டும் வாழ்க்கையல்ல
என பிறருக்கு காட்டுவோம்!

- நிலவை பாா்த்திபன்

பாராட்டுகள்


 

உறக்கம் கலைந்த
நள்ளிரவு நேரத்தில்
உணர்வு பொங்க
எழுதப்பட்டவையாக இருக்கலாம்!
அல்லது ஆவி பறக்கும்
தேநீர் கோப்பையை
ஆறவிட்டு எழுதப்பட்டவையாக இருக்கலாம்!
முகச்சவர நுரைகள்
முழுவதுமாக மழிக்கப்படுமுன்
சவரக்கத்தியை வீசிவிட்டு
அவசர அவசரமாக
எழுதப்பட்டவையாக இருக்கலாம்!
"சாப்பிடும்போது அப்படியென்ன சிந்தனை?"
என்ற மனைவியின்
சிடுசிடுப்பிற்கு நடுவே
பாதியில் கைகழுவி எழுதிய
ஏதோவொரு கவிதையாக இருக்கலாம்!
அவ்வப்போது கிடைக்கும்
அலுவல் இடைவெளிகளில்
ஆர்வம் பொங்க எழுதப்பட்ட சில
அலங்கார வார்த்தைகளாக இருக்கலாம்!
இப்படியாக
பொழுதுகளைப் பொருட்படுத்தாது
எழுதுகிறேன் என்ற பெயரில்
உடலியக்க சுழற்சியினை
உடைத்து நொறுக்கியதன் பயனாய்..
கண்ணெரிச்சல் ஒருபுறம்!
காதடைக்கும் இருபுறம்!
வலி சுமக்கும் வலக்கரம்!
தலைக்குள் ஏதோ வலம்வரும்!
நிற்கவும் இயலா நிலைவரும்!
என
இயல்பை மீறிய
இத்தனை வலிகளும்
விரல்கள் சிந்திய
வியர்வைத் துளிகளும்
இருந்த இடம் தெரியாமல்
இறந்து போகின்றன..
இலக்கிய விரும்பிகள் சிலரின்
இரட்டை இலக்க
விருப்பக் குறியீடுகளாலும்!
வெள்ளையுள்ளங்கள் சிலவற்றின்
வெளிப்படையான பாராட்டுகளாலும்!

- நிலவை பாா்த்திபன்

ஏதோவொன்று


 

உதிரம் குடித்த திருப்தியில்
"உய்" யென உற்சாக ஒலியெழுப்பி
காதோரம் பறந்து கடுப்பேற்றும்
ஒற்றைக் கொசுவோ
எதிரொலித்தடங்கும்
எதிர்வீட்டுப் பெரியவரின்
இருமல் சத்தமோ
அணைக்க மறந்து
அலறித் தீர்க்கும்
அடுத்த வீட்டுக் கடிகாரத்தின்
அலாரச் சத்தமோ
போர்வை விலகிய இடைவெளியில்
எனைப் போர்த்திக்கொண்டு
போர் தொடுக்கும்
பொல்லாத குளிரோ
முன்னாள் காதலியின் முகச்சாயலுடன்
கனவில் வந்து கண்ணடித்துப்போகும்
எவளோ ஒருத்தியோ
முந்தைய இரவுச் சண்டையில்
அந்தவொரு வார்த்தையைச்
சொல்லியிருக்கக் கூடாதென்றெனைக்
குத்திக் கிழிக்குமொரு
குற்ற உணர்வோ
எதுவும் நிச்சயமற்ற
இவ்வெந்திர வாழ்வினைப் பற்றிய
எதிர்கால பயமோ
அலுவலக அரசியலின்
அபாய நிலைபற்றிய
அர்த்த சாம நினைவுகளோ
திடீரெனக் கருத்தில் உதித்து
தீயாய் தகித்தெரியும்
கவிதை ஒன்றிற்கான
கடைசி வரிகளோ
என ஏதோவொன்று
போதுமானதாக இருந்து விடுகிறது
ஆழ்ந்த என்
பின்னிறவு உறக்கத்தினை
அலட்சியமாய் கலைத்துப் போவதற்கும்
அடுத்த சுற்று உறக்கத்திற்காய்
நான் காக்கும்படி ஆவதற்கும்!

- நிலவை பாா்த்திபன்

மரணம்


 

"நல்லாத்தானே இருந்தாரு
தீடிர்னு எப்படி?"
"நேத்து கூட பேசினேனே
என்ன ஆச்சு திடீர்னு?
இப்படி அதிர்ச்சி விலகாத
ஆயிரம் விசாரிப்புகள்!
"அவரோட சிரிச்ச முகம்தான்
நினைவுக்கு வருது!"
"தங்கமான மனுசன்!"
இப்படி புகழுரை சுமந்த
பல புலம்பல்கள்!
"ஆத்மா சாந்தியடையட்டும்"
"ஆழ்ந்த அனுதாபங்கள்"
இப்படி இயந்திரத் தனமான பல
இரங்கல் செய்திகள்!
என.. சம்பவிக்கும்
அனேக மரணங்களைச் சுற்றியும்
சம்பிரதாயமாக பரிமாறிக்கொள்ளப்படும்
இவ்வார்த்தைகள் போலவே
இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வில்
இடைநுழைந்து,
தன் இருப்பை
இயல்பு மாறாமல் பதிவுசெய்துவிட்டு
சலனமின்றிக் கடந்து செல்கிறது மரணம்!
நம்முடனேயே பயணிக்கும் போதிலும்
நம்ப இயலாதவைகளாகவே
நம்பப்படுகின்றுன
நம்மால் சில மரணங்கள்!
தனக்கான தருணம் வரும்வரை
தலைமறைவாக இருந்தாலும்
நம் தலைக்குள் எங்கோதான்
தங்கியிருக்கக்கூடும் இந்த மரணம்!
எதிர்பாரா மரணம் என்று
எதுவுமில்லை இங்கு!
எதிர்காலப் பிணங்களுக்கு
எதற்கு பயம் இன்று?
பிணக்கோலத்தில் தனை
நினைத்துப் பார்க்காத ஒருவன்
பிறக்கவில்லை இன்னும் இப்பிரபஞ்சத்தில்!
பிணைக்காலத்து
கைதியின் நிலைதான்
அனைவருக்குமே இவ்வுலகத்தில்!
மூச்சடங்கிய பின்பான
மோட்சம் பற்றிய கவலை இங்கு பலர்க்கு!
வாழும் வாழ்க்கையே நரகமானதால்
மூச்சடங்குதலே மோட்சம் சிலர்க்கு!
கேள்விக் குறிகளும் ஆச்சரியக் குறிகளும்
நிறைந்த இவ்வாழ்வில்
முற்றுப் புள்ளிகளின்
முக்கியத்துவம் உணர்தலே
முற்போக்கின் முதல் படி!
ஆச்சரியக் குறிகளோ கேள்விக்குறிகளோ
அவற்றிற்கான அங்கீகாரம்கூட
அடியில் வைக்கப்படும்
ஒரு புள்ளியில்தானே அடங்கியிருக்கிறது?
ஆகவே...
நாம் இயங்கியடங்கும் இறுதிப்புள்ளியை
இயற்கையின் முத்தக் குறியீடென
ஒத்துக்கொள்வோம்!
அதுவரை கல்லறைப் பயணம் பற்றி
கவலைப்பட ஒன்றுமில்லையெனக் கற்றுக்கொள்வோம்!

- நிலவை பாா்த்திபன்

சரவணன்களும் செந்தில்களும்


 

இதயத்திற்கு இதமான
இருபது நண்பர்களைப்
பட்டியலிடச் சொன்னால்
ஒரு செந்திலோ
சரவணனோ இன்றி
ஒருபோதும் அப்பட்டியல்கள்
முழுமை பெறுவதில்லை!
எழுபது எண்பதுகளில் பிறந்த
எல்லோரின் நட்பு வட்டத்திலும்
எப்படியும் இருந்துவிடுகிறார்கள்
சில செந்தில்களும் சரவணன்களும்!
சரவணன்களும் செந்தில்களும்
ஏதோவொரு வகையில்
சுவாரசியமானவர்களாகவே
இருப்பதாக என்னைப் போலவே
நீங்களும் உணர்ந்திருக்கக்கூடும்!
செந்தில் சரவணன்களில் பலர்
நெஞ்சில் பட்டவைகளை
நேராகச் சொல்பவராகவே
இருந்துவிடுகிறார்கள்!
சண்டை சச்சரவுகளையும்
அதன் பின்பான சமாதானங்களையும்
சகஜமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்
சரவணன்களும் செந்தில்களும்!
விரக்தி நமை
விழுங்க முயலும் தருணங்களில்
"விட்றா பாத்துக்கலாம்" என்று
தோள் தட்டும் தோழர்களில்
ஒரு சரவணனோ செந்திலோ
இருக்கவே செய்கிறார்கள்!
நண்பனாய் செய்த உதவிக்கு
நன்றி சொல்லிக் கலங்கும்போது
நூற்றுக்கு எண்பது
செந்தில் சரவணன்கள்
மூக்கு நுனியில்
கோபம் கொள்கிறார்கள்
"நமக்குள்ள என்னடா?" என்ற
நயமான சலிப்புடன்!
வடிகட்டிய கஞ்சன்களாக
சில தருணங்களிலும்
வாரி வழங்கும் வள்ளல்களாக
பல தருணங்களிலும்
நமை ஆச்சரியப்படுத்தும்
அனேக நண்பர்களின் வரிசையில்
அவசியம் இருந்துவிடுகிறார்கள்
ஒரு செந்திலோ
அல்லது சரவணனோ!
பென்சில் திருடியவர்களாகவோ
அல்லது
உங்கள் பெஞ்சில் ஒருவராகவோ
என
ஏதோவொரு வகையில்
கவனிக்கத்தக்கவர்களாகவே
நம் வகுப்பறைகளில்
வலம் வந்திருக்கிறார்கள்
இந்த செந்தில்களும் சரவணன்களும்!
பழைய நட்புறவை
அதன் பசுமை மாறாமல்
பார்த்துக்கொள்வதை
சமரசமின்றிச் செய்கிறார்கள்
சரவணன்களும் செந்தில்களும்!
கலகம் கலகலப்பு
அக்கறை அலப்பறையென
பலமுகம் காட்டுபவர்களாகவே
பலராலும் அறியப்படுகிறார்கள்
சரவணன்களும் செந்தில்களும்!
இக்கவிதை வாசிக்கும்
கண்களுக்குச் சொந்தக்காரர்களாக
சில சரவணன்களும் செந்தில்களும்
இருப்பீர்களாயின் சந்தோசம் எனக்கு!
இக்கவிதை வாசிக்கையில்
சில செந்தில்களும் சரவணன்களும்
நினைவு கூறப்படுகிறார்களெனில்
இருமடங்கு மகிழ்ச்சி எனக்கு!
தொன்னூறுகளின் கடைசியிலும்
அதற்குப் பின்னரும்
பிறந்தவர்களுக்கு
சரவணன்களும் செந்தில்களும் நண்பர்களாய்
வாயத்திருக்க வாய்ப்புகள் குறைவு!
"பெயரில் என்ன இருக்கிறது?"
என்றுதானே கேட்கிறீர்கள்?
உண்மைதான்...
நம் துயரப் பொழுதுகளில்
துணைக்கு நிற்கும் நண்பர்களுக்கு
பெயர்கள் எதுவாக இருந்தால்தான் என்ன?

- நிலவை பாா்த்திபன்

ஓய்வு

 


பணி ஓய்வு பெறுகிறார் இன்று
என் பக்கத்து
அலுவலகத்தில் ஒருவர்!
பிரிவு உபச்சார விழா மேடையில்
பெரியதொரு மாலை அணிந்தபடி
சிறியதொரு புன்னகையுடன்
அமர்ந்திருக்கிறார் அவர்!
"பம்பரமாய்ச் சுழன்றுழைத்த
நம்பிக்கைக்குரிய உழைப்பாளி"
போன்ற சம்பிரதாய வார்த்தைகளால்
வந்திருந்தவர்கள் வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்
அந்த அம்பத்தியெட்டு வயது மனிதரை!
"இவர் கால்வைத்த பின்புதான்
வேர்விட்டு வளர்ந்தது
இந்த அலுவலகம்" என்று
சால்வையணிவித்துக்கொண்டே
சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்
சஃபாரி அணிந்திருந்த அந்த
உயரதிகாரி!
சிறு சிறு தவறுகளுக்காக
சிடு சிடுவென எரிந்துவிழுந்த
அதே மேலதிகாரிதான்
சிரித்தபடி அவரைச்
சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்!
இன்னும் சில நிமிடங்களில்
இனிதே நிறைவுற்றுவிடும் விழா!
கழுத்தில் அணிந்த மாலையின் பாரம்
அதைக் கழற்றியவுடன்
காணாமல் போய்விடும்!
ஆனால் மனதில் தொற்றிக்கொண்ட
ஒரு பாரம் இனி
மெளனமாகத் தொடரும்!
அனுதினம் அவரைச்
சுமந்த நாற்காலி
இனி அடுத்து ஒருவரைச்
சுமக்க ஆயத்தமாகியிருக்கும்!
அவர் தலைக்குமேல் சுழன்ற மின்விசிறி
இனி வேறொருவரின்
வியர்வை உலர்த்த
தயாராகியிருக்கும்!
கோப்புகளே கதி என்றிருந்தவரை
மூப்பு வந்து
முழுதாய் விடுவித்திருக்கிறது!
நேற்றுவரை பேனா பிடித்த கரத்தில்
இன்று வெறுமை புகுந்து
விரல் பிடித்திருக்கிறது!
வாசலில் அமர்ந்திருக்கும்
அந்தக் காவலாளியிடம்
"நாளை பார்க்கலாம்"
என்று நாள்தோறும்
சொல்லிச் செல்லும் வழக்கம்
இனி வாய்க்கப்போவதில்லை அவருக்கு!
மாலை நேரத்தில்
தேநீர் கொண்டுவரும் பையனிடம்
ஆறிப்போன தேநீருக்காக
அலுத்துக்கொள்ளவேண்டிய அவசியமும்
இனி இருக்கப்போவதில்லை அவருக்கு!
அலறும் அலாரச்சத்தம் ஏதுமின்றி
இனி அமைதியாகவே விடியப்போகின்றன
அவரது அதிகாலைகள்!
இதுநாள்வரை இயந்திரகதியில்
புரட்டப்பட்ட செய்தித்தாள்களில்
இனி இரங்கல் செய்திகள்கூட
இருமுறை வாசிக்கப்படும்!
"அப்பா... ஆபீஸ் போற வழியில
என்ன பஸ் ஸ்டாப்புல
இறக்கி விட்றுங்க"
"ஏங்க டிபன் பாக்சுல
தயிர் சாதம் வச்சிருக்கேன்,
மதியம் திறக்கும்போது
பாத்து திறங்க"
"வேலை முடிய லேட் ஆச்சுன்னா
கால் பண்ணுங்க"
இப்படியான உரையாடல்கள்
இனி ஒருபோதும்
அவர் செவிகளைச்
சென்றுசேரப் போவதில்லை!
நதியென ஓடிக்கொண்டிருந்த
அவரது பகல்பொழுதுகள்
நத்தையென நகர்வதாக
நித்தம் இனி அவர் உணரக்கூடும்!
இவ்வாறாக நான்
எண்ணிக் கொண்டிருக்கையில்
இறங்கி நடந்து வருகிறார்
எனை நோக்கி அவர்!
இப்போது கைகுலுக்கி முடித்து
கடைசியாக நான் அவருக்கு
சொல்ல வேண்டியது
பாராட்டுகளா? அல்லது ஆறுதலா?

- நிலவை பாா்த்திபன்