Tuesday, November 19, 2013

என் மகன்

 

என் இரண்டரை
வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக்
கலந்த இளந்தளிரே! 

கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு
வரைந்த ஓவியமே! 

எனை அப்பா
என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே! 

என் கரம் பிடித்து
நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப்
பெற்ற பொன்வண்டே! 

குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க
வந்த குறிஞ்சி மலரே! 

மழழை எனும்
மகுடி கொண்டு
மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை
வருடி மகிழ்ச்சியூட்டுவாய்! 

உணவூட்ட உடன்படாது
உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள்
கேட்டே கண்கள் மூடுவாய்! 

தொலைக்காட்சி காணும்போது
தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத்
தோளேறித் தொங்கி ஆடுவாய்! 

நான் அலுவலகம் செல்லும்போது
அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது
அனைத்துத் தேற்றுவாய்! 

புண்ணான மனமும் உன்
புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும்
உன் பூ முத்தம் மாற்றும்! 

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்  
நாள் : 8-Aug-11, 8:41 pm 


No comments:

Post a Comment

Comments are always welcome