Wednesday, November 20, 2013

எதை நான் கிறுக்க?


கவலை வந்து
கழுத்தை நெரிக்க
கரங்கள் எங்கு
கவிதை வடிக்க?

கரங்கள் இரண்டும்
கண்ணீர் துடைக்க
கற்பனை எங்கே
கருத்தில் உதிக்க?

சிந்தும் கண்ணீர்
சீராய் வழிய
சிந்தையில் எங்கு
சந்தம் பிறக்க?

வலிகள் வந்து
வாழ்வைத் தீண்ட
வரிகள் எங்கு
வளமாய்த் தோன்ற?

முட்கள் மனதை
முழுதாய்க் கீற
சொற்களை எங்கே
சோர்வின்றித் தேட?

உணர்வை எல்லாம்
ஊசிகள் தைக்க
உவமையை எங்கே
உள்ளம் நாட?

வாழ்க்கைச் செடியில்
வருத்தம் பூக்க
வார்த்தையில் எங்கு
வசந்தம் சேர்க்க?

நினைவுகள் எல்லாம்
நெருப்பில் நீந்த
புனைவுகள் எங்கே
புதிதாய்த் தோன்ற?

விரக்தியில் மனது
விறகாய் எரிய
விரல்களில் எங்கு
பேனா ஏந்த?

அழுதவிழி இரண்டும்
அப்படியே இருக்க
எழுதுகோல் எடுத்து
எதை நான் கிறுக்க?

அழுத்தும் சோகம்
அகத்தைச் சிதைக்க
எழுத்தும் நடையும்
எங்கே சிறக்க?

எழுதியவர் : நிலவை.பார்த்திபன்
நாள் : 20-Nov-13, 11:52 am 


No comments:

Post a Comment

Comments are always welcome