Tuesday, November 26, 2013

இதற்குப் பெயர் பூமியில்லை

இதற்குப் பெயர் பூமியில்லை 

இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!

இருக்கை கூப்பி
இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு
இரங்கற்பா வாசித்தான்!

விதைக்கக் கற்றவன்
விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன்
சுகவாசியானான்!

நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தன் வனப்பை!

விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!

இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!

இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை! 

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் 
நாள் : 1-Jul-13, 10:48 am

No comments:

Post a Comment

Comments are always welcome