Sunday, February 17, 2019

இறந்த வேங்கைகளுக்கோர் இரங்கற்பா

அங்கே சீருடைகளுடன் சிதறிக்கிடப்பவை
உயிரற்ற உடல்கள் மட்டுமல்ல!
உடைந்துபோன ஒவ்வொரு
இந்தியனின் உள்ளங்களும்தான்!

அங்கு இரணப்பட்டுக் கிடப்பது
இராணுவ முகாம்கள் மட்டுமல்ல!
மனம் நொந்த இந்தியர்களின்
பலகோடி இல்லங்களும்தான்!

தீராப் பசிகொண்ட தீவிரவாதம்
எங்கள் தீரர்கள் சிலரைத்
தின்று விழுங்கியிருக்கிறது!

குண்டு  வெடித்தது
புல்வாமாவில் என்றபோதும்
குமரிவரை இன்று குலுங்கியிருக்கிறது!

ஒருபுறம்
நேசமிகு உறவுகளைத்
தேசத்திற்காய் இழந்துவிட்டு
பேசவும் இயலாது
பெருந்துயரில் சில குடும்பங்கள்!

மறுபுறம் இது
மோசமிகு அலட்சியமா அல்லது
கூசவைக்கும் அரசியலா
என ஊசலாடும் ஊகங்களால்
உள்நாட்டில் சில குழப்பங்கள்!

கலவர இரத்தத்துளிகள்
காலங்காலமாய் சிதறித் தெறிப்பதால்
எந்நிறப் பூக்களாயினும்
செந்நிறத்திலேயே பூக்கின்றன
கண்ணீர் பிரதேசமான காஷ்மீரில்!

கனரக ஆயுதங்கள்
காலங்காலமாய் மோதிக்கொள்வதால்
வெடியோசையற்ற அமைதிக்காக
வெகுநாட்களாய் காத்திருக்கின்றன
காஷ்மீரத்து உயிர்களின் காதுகள்!

எங்கள் எல்லைச் சாமிகளை
எதிர்நோக்கத் துணிவின்றி
கொல்லைப்புற வழியாக
கொன்றுபோட்ட கோழைகளே!

அடிக்கோடிட்டு எழுதிக்கொள்ளுங்கள்
அழிவுகாலம் இது உங்களுக்கென்று!
அமைதிகொள்ளும் இனி எமது ஆயுதங்கள்
அசுரப் பிறவிகள் உங்களைக் கொன்று!

நீங்கள் தீவைத்து விளையாடும்
தீவிரவாதத் திரிமுனைகளை
உங்கள் குருதி கொண்டே இனி
குளிர்விப்போம்!

குண்டு வெடிப்பால் உண்டான
பள்ளங்கள் அனைத்தையும்
உங்கள் சவங்களால் நிரப்பி
சமன் செய்வோம்!

இனி வெள்ளைக் கொடிகள்
தன் வேலை மறந்து உறங்கட்டும்!
வெற்றிக் கொடிகள் நம்
மண்ணில் ஆழ இறங்கட்டும்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome