Thursday, February 28, 2019

பூக்காத கிளைகள்

திருத்த இயலா இறைவனின் பிழையாய்
இருபாலர்க்கும் இடைப்பட்ட நிலையாய்
குருஞ்சிச் செடியின் பூக்காத கிளையாய்
வருத்தக் கடலில் வற்றாத அலையாய்
இழந்து வாழ்கிறோம் 
எமக்கான பங்கை!
இத்திருநாட்டில் எமது பெயர் 
"திருநங்கை"!

கங்கையாய் பிறந்திருந்தால்
முக்கண்ணன் முடி சேர்ந்திருப்போம்! 
மங்கையாய் பிறந்திருந்தால் 
மானத்தோடு வாழ்ந்திருப்போம்!
திருநங்கையாய் பிறந்ததனால்
தினந்தோறும் மனம் வருந்துகிறோம்!

வலி, இரணத்தோடு 
வாழ்வைக் கடத்தும் எமக்கு 
அலி, அரவாணி என
ஆயிரம் பெயர்கள்!

இழி குணத்தோடு 
இழிவு செய்யும் பலரால்
இடைவிடாது எமை 
துரத்தும் துயர்கள்!

அரைவேக்காட்டு ஹார்மோன்களா?
குழம்பிப்போன குரோமோசோம்களா?
குற்றமென்று எதைச் சொல்ல?
புழுக்களா நாங்கள் புறந்தள்ள?

கொச்சையாய் விளிப்பீர்கள்!
துச்சமாய் மதிப்பீர்கள்!
இச்சைக்கு அழைப்பீர்கள்!
பிச்சைகேட்டால் வெறுப்பீர்கள்!

அழிந்து வரும் உயிரினங்கள் 
ஆயிரம் உண்டு காட்டினுள்ளே!
வதைந்து சாகும் உயிரினங்கள் 
எமைப்போலே நாட்டிலில்லை!

கழிப்பிடங்கள் கூட 
எமக்கென்று ஏதுமில்லை! 
மதிப்புடனே வாழும்படி 
வேலைதர யாருமில்லை!
அன்னை தந்தை இருந்தபோதும் 
ஆதரிக்க எவருமில்லை!
பெண்ணாய் எமை ஏற்பதற்கு 
பெண்களுக்கே மனது இல்லை!

கேலியாக எமை நோக்கும்படி 
கேவலங்கள் எம்மில் ஏது?
தோழியாக எமைப் பார்ப்பீர்களெனில்
பாலியல் தொழில் எமக்கெதற்கு?

சபிக்கப்பட்ட வர்கம் நாங்கள் 
சம உரிமை தாருங்கள்! - எமை 
தவிக்கவிட்ட கடவுளைக் கண்டால் 
சரியா இது எனக் கேளுங்கள்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome