Thursday, February 28, 2019

தேர்தல் மேடையில் தேசபக்தி நாடகம்

அடுத்தமுறையும் ஆட்சியமைக்க
அபிநந்தன்களை அடகுவையுங்கள்! - உங்கள்
அட்டூழியம் கண்டு ஆத்திரம் கொண்டால் 
'ஆண்டி இன்டியன்' என அடக்கி வையுங்கள்!

வழியும் குருதி
வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
வர்ணாசிரம தர்மம்
வரண்டிடாமல் காத்துக்கொள்ளுங்கள்!

எரியும் நெருப்பை
எப்போதும் அணையவிடாதீர்கள்!
எல்லைப் பதற்றங்களை
எள்ளளவும் தணியவிடாதீர்கள்!

வெடிமருந்து வாசம் பரப்பி
வெகுஜனங்களை வெறியேற்றுங்கள்!
வேற்றுமை கோஷம் எழுப்பி
வேண்டாதவர்களை வெளியேற்றுங்கள்!

பாவப்பட்ட பாரதமாதாவை
'ஜே' சொல்லி வெறுப்பேற்றுங்கள்!
ஓட்டுக்காக மக்களைப் பிரித்து - எங்கள்
ஒற்றுமையின் மீதே நெருப்பேற்றுங்கள்!

ரஃபேல் கறைகளை
இரத்தக் கறைகளால் மறையுங்கள்!
படேல் சிலைகளை
பாரதமெங்கும் நிறுவுங்கள்!

தேர்தல் வருகிறது
தேசபக்தியைத் தேடியெடுங்கள்!
தெருவோரத் தொழிலாளர்களின்
கால்பிடித்துக் கழுவிவிடுங்கள்!

படுதோல்வி பயம் வந்தால்
படைவீரர்களை பலி கொடுங்கள்!
பாகிஸ்தானுடன் பகைமை வளர்த்து
இந்தியர்களின் இதயம் தொடுங்கள்!

காஷ்மீரத்துப் பாவக்கணக்கை
காசி கங்கையில் கழுவிக்கொள்ளுங்கள்!
கார்ப்பரேட் கனவான்களை மட்டும்
காசுக்காகத் தழுவிக்கொள்ளுங்கள்!

ஒருபுறம் ஈவிரக்கத்திற்கு
ஈமக்கடன் செய்துகொண்டே
மறுபுறம் தீவிரவாதத்தை
திட்டித் தீருங்கள்!
பொருளாதாரத்தை பொசுக்கிய கையோடு
வருங்கால இந்தியாவிற்கு
வாய்க்கரிசி போடுங்கள்!

மதவெறி இரத்தம் பாய்ந்து
மலரட்டும் தாமரை!
மறுமுறையும் நீங்கள் வென்றால்
தேசத்திற்கே இனி தேய்பிறை!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome