Tuesday, June 16, 2020

அப்பா

எழில்மிகு இந்த உலகினில் உலவும்
எட்டாவது விந்தை!
தழும்பிடும் அன்பை தனக்குள் சுமக்கும் அழகிய உறவே தந்தை!

தெய்வம் எல்லாம் தோற்பதில்லை தந்தை அன்பின் முன்னாலே!
தெய்வம் என்றே அர்த்தம் ஆகும் தந்தை என்று சொன்னாலே!

கருப்பையில் நம்மை சுமந்தவளுக்கு கவிதைகளுண்டு ஆயிரம்!
பொறுப்பைச் சுமக்கும் தந்தையரை நாம்
புறக்கணித்தால் கேவலம்!

பயமுறுத்தும் கடலில்தானே
பவளமும் முத்தும் பலவிருக்கும்! - அதுபோல்
கெடுபிடி காட்டும் தந்தைக்குள்ளே
கெட்டிப்பட்ட அன்பிருக்கும்!

நல்ல நிலையில் பிள்ளையைக் காண
சொல்ல இயலா துயர் பொறுப்பார்!
அள்ள அள்ளக் குறையா அன்பை
உள்ளத்திற்குள் மறைத்திருப்பார்!

தந்தையென்ற உறவை விடுத்து
தரணியில் உயர்ந்தது ஏது?
தன்னை உருக்கி நம்மை உயர்த்தும்
அவருக்கு இல்லை ஈடு!

கப்பலாய் இருந்து கரைசேர்க்கும் அந்த
தந்தையைப் போற்றி உயர்வோம்!
அப்பழுக்கில்லா அன்பின் மறுபெயர்
அப்பா என்று உணர்வோம்!

தன்னலமில்லா இதயம் கொண்ட
தந்தையின் ஆசிகள் பெறுவோம்!
இன்னலை மறந்து நம் நலம் காத்த
அவரது தவறுகள் பொறுப்போம்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome