Monday, June 15, 2020

சுவாசிக்க இயலவில்லை என்னால்



"சுவாசிக்க இயலவில்லை என்னால்"

அழுத்தப்படும் கழுத்து நரம்புகளின்
அடியிலிருந்து எழுகிறது அந்த
அபயக் குரல்!

கதறல் எழுவது
கருப்புத் தொண்டையிலிருந்து என்பதாலோ என்னவோ
கடைசிவரை கண்டுகொள்ளப்படவில்லை
அந்தக் கல்நெஞ்சக் காவலர்களால்!

ஒன்பது நிமிடங்களுக்குள்
ஓய்ந்து போகிறது அந்த
ஒடுக்கப்பட்டவனின் ஓலம்!

முரட்டு இனவாதத்தின்
முழங்காலில் சிக்கி
சாலையோரத்தில் சடலமாகிப்போகிறான்
சற்றுமுன் உயிர்ப்புடன் இருந்த
அந்த சாமானியன்!

வெறிபிடித்த அந்த
வெள்ளை அதிகாரியால்
மரித்துப் போகிறது
மானுடம் அங்கு!

அரிப்பெடுத்த அதிகார வர்கத்தினால்
அடங்கிப்போகிறது ஆத்மா ஒன்று!

இருபது டாலர் கள்ள நோட்டிற்காக
குரல்வளை நெறித்துக் கொல்லப்படுவதென்பது
நிற வெறியின்
நீள அகலங்களுக்குள்
நிதர்சனமாய் பொருந்திப் போகிறது!

கொடுமை கண்டால்
கொதித்தெழும் உணர்வு ஒன்றே
கொரோனாவையும் மீறி
கோடு தாண்ட வைத்திருக்கிறது
வல்லரசு தேசத்தின்
நல்ல குடிமக்களை!

கருப்பும் வெள்ளையும்
கரம் கோர்த்துக் களமிறங்கியதில்
சிதறித் தெறிக்கிறது
சிவப்புச் சித்தாந்தம் அங்கு!

ஒடுக்குமுறையினால் நிகழ்ந்த
ஒற்றை மரணத்திற்கே
ஓராயிரம் எதிர்ப்புகள்
ஓங்கி ஒலிக்கிறதங்கே!

இங்கோ...
ஏகப்பட்ட ப்ளாயிட்டுகளை
ஏற்கனவே இழந்திருக்கிறது
பாவப்பட்ட எங்கள் பாரத தேசம்!

தூத்துக்குடி துப்பாக்கிகள் வெடித்ததில் துடிதுடித்து சிலர்!
மாட்டுக் கறியால்
மண்டை உடைந்து சிலர்!
மத வெறியின் மரணப் பசிக்கு பலர்!
கரை வேட்டிகளின் நரவேட்டைக்கு சிலர்!

என...
பல உண்டு
எங்கள் பட்டியலில்!

வெடித்தெழுவது உங்கள் பாணியென்றால்,
வேடிக்கை பார்ப்பது எங்களது பாணி!

ஆ..ஊ..என்றால்
அமெரிக்காவைப் பார்
என அலறும் நாங்கள்
ஆர்பாட்டமென்றால் மட்டும்
அத்தனை துவாரங்களையும்
அடைத்துக்கொள்வோம்!

என்ன செய்வது?...

நாடாள்வது எமன்களாக இருந்தாலும்
நாங்கள் மட்டும் எருமைகளே!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome