Thursday, January 10, 2019

ஆறறிவு தேவையில்ல

ஆறறிவு தேவையில்ல

ஒறங்கிப்போன சாமிக்கிங்க
எறங்கி வர நேரமில்ல!
கொரங்கு ஒன்ன விட்டா என்
கொறையச் சொல்ல யாருமில்ல!

ஓஞ்சு போன வயசுலயும்
ஒழைக்காம சோறு இல்ல!
சீக்கு வந்து கெடந்தாலும்
சீந்த ஒரு நாதியில்ல!

எழவெடுத்த ஒலகத்துல
எனக்குன்னு ஏதுமில்ல!
விதி முடியும் நேரம்பாத்து
விழுந்து கெடக்கேன் வீதியில!

ஒத்த வாயி சோறுபோடும்
ஒறவு இல்ல ஊருக்குள்ள!
சோந்துபோன மனசுல நான்
சொமக்காத பாரமில்ல!

நெறைய சொந்தம் இருந்துங்கூட
நெஞ்சுக்குள்ள ஈரமில்ல!
இவிங்க வந்து கொள்ளி வச்சா
வேகாது ஈரக்கொல!

பொதிமாடாப் பொழச்சதெல்லாம்
போதும் இந்த பூமியில!
கூட்டி என்ன போகச்சொல்லி
கும்புடாத சாமியில்ல!

அஞ்சறிவா ஒன்னப் பாத்த
எவனுக்குமே மூளையில்ல!
ஆறுதல காமிக்க
ஆறறிவு தேவையில்ல!

எறங்கி என்ன தேத்துற நீ
எனக்கு இனி மகன் போல!
கொரங்குன்னு ஒன்ன சொன்னா
கோவம் வரும் இனிமேல!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome