Wednesday, April 24, 2019

திமிர்பிடித்த தீவிரவாதமே

தேவாலயச் சுவர்களில்
தெறித்துச் சிதறி வழிகிறது
ஏதுமறியா அப்பாவிகளின் உதிரத் துளிகள்!

சாமானியரின் சடலங்கள்
சதை பெயர்ந்து கிடப்பது கண்டு
சத்தமின்றி அழுகின்றன சமூகத்தின் விழிகள்!

இறந்து கிடப்பவர்கள்
இழைத்த பாவமென்ன?
இலங்கைத் தீவின்மேல்
இறைவனுக்குக் கோபமென்ன?

மூர்க்கமாய் பல உயிர்கள் குடித்த
முகமறியா மூடர்களே!
தீர்ந்ததா உங்கள் தீவிரவாத வெறி?
வேறெங்கு நீளக் காத்திருக்கிறது 
உங்கள் வெடிகுண்டின் திரி?

வெடிச் சிதைவுகளில் சிக்கி
துடித்தடங்கிப்போன உயிர்களினூடே
நீங்கள் அடைந்திட்ட ஆதாயமென்ன?

நொடிப்பொழுதும் நிச்சயமற்ற
இப்புவி வாழ்வில் பூசல் கிளப்பும்
உங்கள் அகங்காரத்தினால் ஆவது என்ன?

அகலக் கண் திறந்து
அருகே சென்று பார்
உன் ஆயுதத்தினால் விளைந்த
அலங்கோலங்கள் அவை!

சகலமும் அடங்கிக் கிடக்கும்
சவங்களைப் பார்
சற்றுமுன் உயிர்ப்புடன் இருந்த
சதைக்கூளங்கள் இவை!

எத்தனை கதறல்கள்?
எத்தனை ஓலங்கள்?
அத்தனை திசைகளிலும்
அழுகையின் ஓசைகள்!

வெடித்த குண்டுகளுக்காக
வெட்கப்படுங்கள் மிருகங்களே
அப்பாவிகளைக் கொல்லும் நீங்கள்
எப்போதும் கோழைகள் என்பதற்காக!

அங்கு கேவியழுவோரின் கேள்விகளுக்கு
விடையென்ன விலங்குகளே?
காலம் உங்களைக் காவுகொள்ளும்
காத்திருப்போம் அதைக் காண்பதற்காக!

திமிர்பிடித்த தீவிரவாதமே  - உன்
வெறிபிடித்த வேட்டையை நிறுத்து!
பகை வளர்க்கும் பயங்கரவாதமே
வெல்வோம் உனது வேர்களை அறுத்து!

 - நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome