தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!
என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்!
எத்தனை முறை எண்ணிப் பார்க்கினும்
எள்ளளவும் சலிப்பதில்லை
என் அரைக்கால் சட்டைப் பருவத்து
அற்புத தீபாவளி நினைவுகளை!
நான்கு மணிக்கு எழுப்பச் சொல்லி
நாற்பது முறை நினைவுபடுத்தியதில்
என்னோடு சேர்ந்து அம்மாவும்
தூங்காமல் போன தீபாவளி இரவுகள் முதல்,
தீபாவளி அதிகாலையில்
தெருவில் வெடிக்கும்
முதல் வெடி யாருடையது?
என்கிற போட்டியில்
அத்தனை தீபாவளிகளிலும்
அசராமல் தோற்றது வரை
எதுவும் அகலவில்லை
என் இனிய நினைவுகளை விட்டு!
தீபாவளிப் பலகாரம் மட்டுமல்ல
தீபாவளிப் பண்டிகையே
தித்திக்கத்தான் செய்தது அன்று!
இப்போதும் வரத்தான் செய்கிறது
வருடம் தோறும் தீபாவளி!
அதே பட்டாசு சத்தம்! அதே பலகார வாசம்!
ஆனாலும் குறைகிறது
ஆழ் மனதில் ஏதோவொன்று!
- நிலவை.பார்த்திபன்
வணக்கம்
ReplyDeleteதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-