Tuesday, May 28, 2019

சூழல் காப்பது சுகம்



காசு தேடியே களைத்த மனிதா 
காடு செய்வோம் வா!
மாசு ஏறிய உலகினைக் கொஞ்சம் 
மாற்றியமைப்போம் வா!

தூசு நிறைந்த காற்றினைச் சலித்து 
தூய்மை செய்வோம் வா! - நாம் 
தூக்கி எறிந்திடும் விதைகளையெல்லாம் 
துளிர்த்திடச் செய்வோம் வா!

வறண்டு கிடக்கும் வனங்களையெல்லாம் 
வளமாய் மாற்றிட வா! 
இரண்டு மரங்களை இழந்தோமென்றால் 
இருபதை நடுவோம் வா!

தூறல்கள் சிந்தும் மேகத்தை இழுக்க 
தூண்டில்கள் செய்வோம் வா!
மீறல்கள் இல்லா விதிமுறை வகுத்து 
மீட்போம் இயற்கையை வா!

வன உயிர்களின் வாழ்விடம் காக்க 
வகை செய்வோம் வா! 
வணிக நோக்கில் வனம் அழிக்கும் 
வஞ்சகம் எதிர்ப்போம் வா!

சூழல் காப்பதே சுகமென அறிய
தோழனே நீயும் வா!
சூரியச் சூட்டின் வீரியம் குறைக்க
சூத்திரம் செய்வோம் வா!

இருகரம் கூப்பி இயற்கையைத் தொழுவோம்
இளைஞனே நீயும் வா!
இறப்புக்கு முன்பே இயன்றதைச் செய்து 
இலக்கினைத் தொடுவோம் வா!

சுற்றுச் சூழலின் சுத்தம் காத்திட
யுத்தம் செய்வோம் வா!
தொற்று நோய்களைத் தோற்கச் செய்ய
சற்று முயல்வோம் வா!

மரங்களைக் காக்க கரங்களைக் கோர்ப்போம்!
மனிதா நீயும் வா!
உறக்கங்கள் இனியும் உள்ளத்தில் எதற்கு
உழைத்திட நீயும் வா!

வறட்சியைக் கொன்று வளங்களைக் காக்க
வாலிபனே நீ வா!
வருங்காலத்தை வசந்தங்கள் தழுவ
வழிவகை செய்வோம் வா!

பாரதத் தாய்க்கு பசுமை உடுத்தி
பரவசம் கொள்வோம் வா!
வேறெது நமக்கு இதைவிட பெருமை
வேர்களில் நீர்விட வா!

தனிமரம் தோப்பாய் ஆவது இல்லை 
அணிசேர்ந்திட நீ வா!
இனிவரும் தலைமுறை நமையே பழிக்கும் 
இருப்பதைக் காப்போம் வா!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome